Friday, February 18, 2011

சிங்கத் தமிழனை..! - தமிழக மீனவர்களுக்காக புரட்சிக் கவிதை..!



வங்காள விரிக் கடலில்
சிங்கத் தமிழனை 
சீண்டிக் கொண்டே இருக்கும்
கொழுப்பெடுத்த 
சிங்களப் படையினை
எம் தமிழ் மீனவர்களால் 
சிறை பிடிக்க நிமிட நேரமாகாது...

இங்கிருப்பது கரி பரிப் படை...
அங்கிருப்பது குள்ள நரிப் படை...
இனியும் பொறுக்கோம்...
சிங்களப் படையினை நையப்புடை..!
சட்டென்று அவன் மென்னியை உடை..!
இல்லையேல் இந்தியன்
என்ற சொல்லை செய்திடு தடை..!

மத்தியில் இருக்கும்
'கை'யாலாகாதவர்களுக்கு
மாநிலத்தில் இருக்கும்
'கை'க் கூலிகளே...
'கை' விரித்த கூலிகளே...
மானம் காத்த தமிழனின்
இன்னுயிர் அங்கே வங்கக் கடலில் 
போய்க் கொண்டிருக்க...
கண்டவனுக்கு கடிதம் போட்டு
கண்டனம் போட்டு என்ன பலன்...

சுயநல அரசியல் பகடையாட
பரதவக் குடிமக்களின்
குரல் வளையை அறுக்கலாமா?
குற்றுயுரும் குலையுயிருமாய்
அவர்களை ஆக்கலாமா..?
எகிப்திய பூமியாய்
இந்தியா மாறுவதற்குள்
இதற்கொரு தீர்வு காண்பீர்..!

ஆசையை ஓழிக்கச் சொன்ன
புத்தனின் வழியை
பின்பற்றுவதாகச் சொல்லும்
சிங்களப் பித்தர்களின்
வெறியாட்ட ஆசை ஏன்..?
அவர்களை வெறியாட
வைக்கின்ற ஆசையினை
உண்டாக்கி வைத்தவன் எவன்..?

தன்மானத் தமிழனை
வம்புக்கு இழுக்கிறான்
சிங்களவன்...
வலியவே வந்து வம்பினை
இழைக்கிறான்...
பொறுத்தது போதும் 
என் தமிழினமே...

துட்டர்களின் கொட்டமடங்க
துள்ளியெழு... 
பித்தர்களின் பித்தமடங்க
பீறிட்டு எழு...
நம்மை நாமே காத்துக் கொள்ள
நரம்பதிர எழு..!

வம்புச் சண்டைக்குப் போகாதே
வந்த சண்டையை விடாதே...
அப்படி விட்டால்
நம் தமிழ்த்தாய்
ஊட்டி வளர்த்த வீரம் 
ஊனமாகிவிடும்...
உறைந்து போய்விடும்..!

அன்றங்கே தமிழனின்
தலை நிமிர்ந்திருந்தால்
இன்றிங்கே நம் தமிழனின்
தலை வாங்கப் பட்டிருக்குமா?
கண் கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரமா..?
பொறுக்கோம் இனி ஒரு கணம்..!

உயிருக்கு உயிர்...
உடலுக்கு உடல்...
ஒரு வெறியனையாவது
வீழ்த்திக் காட்டினால்தான்
சிங்கத்தின் கோபம்
சிறு நரிக்குத் தெரிய வரும்...
புலியின் கோபம்
புல்லர்களுக்குத் தெரியவரும்...

தரணியாண்ட தமிழனைக் காக்க
தமிழினமே ஒன்று படு...
தமிழர்களின் தன்மானத்தைக் காக்க
தமிழகமே எழுந்து விடு...
தமிழினத்தின் உயிர்களைக் காக்க
தமிழ் உறவுகளே
கிளர்ந்தெழு... சினந்தெழு..!

இனி ஒரு உயிர் போனாலும்
சிங்களப் படையினில்
பல உயிர் போக வைப்போம்...
உலகப் போர் மூண்டாலும் சரி
அந்த மூடர்களை முடக்கி வைப்போம்...
தமிழனை தலை நிமிர வைப்போம்..!

- அடங்கா கோபத்துடன்

மோகனன் (எ) மோ. கணேசன்

(சோழிங்க நல்லூர் சாலை சந்திப்பில், நாளை (19.02.2011) கணிப்பொறி வல்லுனர்களின் கூட்டமைப்பினரால், தமிழக மீனவர்கள் படுகொலையினை கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. அப்போரட்டத்தில் கலந்து கொள்ள நண்பர் திரு. க. ராமலிங்கம் அழைப்பு விடுத்திருந்தார். அப்போராட்டத்திற்காக எழுதப்பட்ட கவிதை இது..)

6 comments:

  1. Singala narigalin
    veriyattathai muriadippom,
    Nam thamizharinathai
    perukkuvom,
    Irandha thamizharukku
    veera vanakkam seivom…

    Irandha thamizharukku “ANJALI in KANEER ANJALI”

    ReplyDelete
  2. சிறு தீப்பொறிதான்...

    நாளை எரிமலையாகும்..!

    அஞ்சலி செய்வதை விடுத்து, அம்மடையர்களை மண் கவ்வச்செய்வோம்...

    ReplyDelete
  3. Ayyo very very super

    No words to me


    Ovoru tamilanukkum irukka vendiya

    ottumotha unarchiyum mogananin ullathil ponguvathu

    perimaiyai irukkirathu,

    Ovoru thamilanukkum (anaithu indianukkum) intha unarchi irunthal

    epadi irukkum...

    ReplyDelete
  4. தமிழ் இனமுரசாய் ஓங்கி ஒலிக்கட்டும் உங்கள் குரல்..!

    ReplyDelete
  5. வாங்க ஜோதி...

    என்றோ என் மனதில் கனன்று கொண்டிருந்து கோபத்தீயின் வெளிப்பாடு இது...

    ஒலிக்கட்டும் தமிழனின் குரல்...

    அடிக்கடி (சு)வாசிக்க வாங்க..!

    ReplyDelete
  6. வாங்க ராஜசேகர்...

    நாம் எல்லோருமே தமிழ்த்தாயின் பிள்ளைகள்...

    நம் ஒவ்வொருவரின் குரலும்... தமிழ் இனமுரசின் குரலே...


    அடிக்கடி (சு0வாசிக்க வாங்க..!

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...