காதலாகிக் கசிந்துருகி
கண்ணீர் மல்கி
கன்னியினைக்
கரம் பிடிக்க முயன்றான்
காளையவன்
இளவரசன்
கன்னியும் அவனைக்
கைப்பிடிக்க
முன் வந்தாள்..!
காதல் மனங்கள்
சதிபதியாய்
இணையத் தடை
வந்தது
சாதி எனும்
எமன் வடிவில்..!
எதுவரினும் இருவரும்
சமர் புரிவோமென
புரட்சித் திருமணத்தினை
தாமாகவே செய்து கொண்டனர்
இருமனம் இணைந்தது
குற்றமெனக் கருதி
சாதி வெறிபிடித்த
ஓநாய்கள் ஓலமிடவே
கன்னியின் தந்தை
தன்னையே
கொலை செய்துகொண்டார்
அப்போது வெடித்தது கலவரம்
எளியோரின் கிராமத்தில்
நீண்டது
வன்முறைக் கரம்
சாதித் தீ மூண்டதால்
அக் கிரமாம்
அக்கிரமக்காரர்களால்
ஆனது தீக்கிரை...
சாதீய ஓநாய்கள்
தொடர் ஊளையிடவே
அங்கு காட்சிகள் மாறின
சாதீயக் கட்சிகள்
அறிக்கையில் ஊறின
மிரட்டும் பாணியில்
ஓலம் ஊதின
கன்னியின் அன்னை
அழுது புலம்ப
அன்னை மடிதேடி
அவளும் கிளம்ப
அவனோ வெட்டி விடப்பட்ட
மொட்டை மரமானான்
தனித்து விடப்பட்ட
பாலை நிலமானான்
மனம் தளரா விக்கிரமாதித்தன் போல்
நீதிகேட்டு போராடினான்
நீதிமன்றத்திற்கு
வந்த கன்னியோ
வாழவிருப்பமில்லை அவனோடு
வாழ்வேன் இனி நான்
அன்னையோடு என்றாள்!
அத்தகைய முடிவு
அன்னை மேலுள்ள பாசமா
சாதி வெறிபிடித்த
நாய்களின் கோபாவேசமா?
அவனால் பிரித்தறியமுடியவில்லை
கரம் பிடித்தவள்
மனம் மாறுவாள்
மண வாழ்க்கை ஏறுவாள்
என நினைத்தவன்
எண்ணத்தில்
மண் விழுந்தது
மனம் துவண்டது
என்ன நினைத்தானோ
ஏது நினைத்தானோ
காலமொன்றே அறியும்
கன்னியின் பேச்சால்
காயம்பட்டவன்
தன்னையே மாய்த்துக் கொண்டான்
தன்னுயிரை நீத்துக் கொண்டான்
என ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன
சில கொலை என கூறுகின்றன
ஒரு காதல் மணம்தான்
இரு உயிர்களின் நீக்கத்திற்கு
காரணமென்று
யாரேனும் சொன்னால்
அவர்களை .....ஆல் அடிக்க வேண்டும்
இவைகள்
தற்கொலை அல்ல
சாதீய எண்ணங் கொண்ட
ஓநாய்கள்
செய்த கொலைகள் அன்றோ?
இத்தரங்கெட்ட நாய்களை
தண்டிப்பவர் யார்?
இச்சாதி வெறிபிடித்த நாய்களை
கொன்றழிப்பவர் யார்?
கேள்விகள் கிளை விட்டு முளைக்கின்றன
பதில் தருவார் யாரோ..?
மகள்தானே மணம் கொண்டாள்
மகிழ்ந்திருப்போம்
என கன்னியின்
தந்தையும் நினைக்கவில்லை
கணவன்தான் போய்விட்டார்
மகளேனும் வாழட்டும்
என அவளன்னையும்
நினைக்கவில்லை
கரம் பிடித்தவனோடு
வாழ்ந்து பின் அன்னையை
சமாதானம் செய்வோம்
என அவளும் நினைக்க வில்லை
எத்தனை துயர் வரினும்
துஞ்சாமல் கைப்பிடிப்போன்
என அவனும் நினைக்கவில்லை
போங்கடாங்க நீங்களும்
உங்க கல்யாணமும்..!
இப்படியே ஒவ்வொருவரும்
செய்து மாண்டால்
நம் நாட்டில்
சாதீயம் இருக்கும்
சமுதாயம் இருக்காது
சாதிவெறி இருக்கும்
சமத்துவம் இருக்காது
ஏற்றத்தாழ்வு இருக்கும்
ஒற்றுமை இருக்காது
போங்கடாங்க நீங்களும்
உங்க கேடுகெட்ட சமுதாயமும்..!
(கவிதை எழுதி கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. இத்தனை நாட்களாக எழுதத் தோன்ற இயலா அளவிற்கு மோசமான சம்பவங்கள் என் வாழ்வில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இன்று என்னை மட்டுமின்றி ஒட்டு மொத்த காதலர்களையே உலுக்கும் செய்தியாக இளவரசன் மரணம் அமைந்து விட்டது. நெஞ்சு பொறுக்கவில்லை... வார்த்தைகாளாக இங்கே கொட்டி விட்டேன். என்று மாறும் இந்த சமுதாயம்.
இளவரசா... பொறுத்திருந்திருக்கலாமே நீ... பொறுத்தவர்தானே பூமி ஆழ்வார்... ஆதலினால் காதல் செய்வீர் என்பதை, ஆதலினால் சாதல் செய்வீர் என்றாக்கி விட்டார்களே... உனது முடிவைக் கேட்டதிலிருந்து கண்ணீர் விம்முகிறது...
சாதீய பலிக்கு உனது உயிரே கடைசியாக இருக்கட்டும்!
நிற்க மறுக்கும் கண்ணீருடன்
மோகனன்)