Saturday, October 12, 2013

அழகிற்கே இலக்கணம்!


பேச்சு மொழிக்கு இலக்கணம்
கற்றுத் தேர்ந்த நான்
உன் மௌன மொழிக்கு
இலக்கணம் தெரியாமல் திண்டாடுகிறேன்!
கம்பீர நடை பயின்று
தேர்ந்த நான்
உன் தளிர் நடையில்
தடுமாறுகிறேன்!
முல்லைக் கொடியின் அசைவில்
முறுவல் பூக்கும் நான்
உன் கொடி இடை அசைவில்
மூர்ச்சையாகிப் போகிறேன்!
கருநாகமே வந்தாலும்
அதை மயக்கும் திறன் கொண்ட நான்
உன் கருநாகக் கூந்தலில்
மயங்கிப் போகிறேன்!
சிட்டுக்குருவிகளின்
சிருங்காரப் பேச்சில் சிலாகித்த நான்
உன் சிக்கனப் பேச்சில்
சித்தம் சிதறிப் போகிறேன்!
கூடல் நகரில் பிறந்து
மாநகரையே மயக்கும்
சங்கத் தமிழே..!
சங்கீதத் தமிழே..!
உனைக் கண்ட பின்புதான்
அழகிற்கே இலக்கணம்
எதுவென்பதை அறிந்து கொண்டேன்!
அதன்படி ரசிக்கவும் கற்றுக் கொண்டேன்!

12 comments:

  1. வணக்கம்

    உன் மௌன மொழிக்கு
    இலக்கணம் தெரியாமல் திண்டாடுகிறேன்

    இன்னும் எவ்வளவு திண்டாட வைப்பால் போகப் போகத்தான் புரியும் அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அழகால் திணறிப்போனவனுக்கு திண்டாட்டம்தான் மிச்சம் ரூபன்...

    கன்னியவள் கண்ணசைத்தால் மட்டுமே கொண்டாட்டமாகும்...

    ReplyDelete
  4. நன்றி தனபாலரே...

    ReplyDelete
  5. அழகு ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வாங்க சரவணரே... உங்க ஊருக்குதான் இந்த கவிதையோட பெருமை சேரும்...

    ReplyDelete
  7. மிகவும் அருமையான படைப்பு. அக மகிழ்ந்தேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்! :)

    ReplyDelete

(சு)வாசித்தமைக்கு நன்றி... நிறைகளை தட்டி விட்டு... குறைகளைச் சுட்டுங்களேன்...