Thursday, March 13, 2014

SMS காதல்


என் குறுஞ்செய்தியைப்
பார்த்ததும்
உன் குவலய முகம்
குதுகலமாய்ப்
பூக்கிறது
என்பதாலேயே
அடிக்கடி உனக்கு
குறுஞ்செய்தி அனுப்புகிறேன்...
செய்தி ஏதும்
இல்லை என்றாலும் கூட..!

Tuesday, March 11, 2014

வாய்கூசாமல் அம்மாவென்று..! - அரசியல் கவிதை


எங்கள் அம்மா
புரட்சித்தலைவி அம்மா
தாயுள்ளம் கொண்ட அம்மா
என்றெல்லாம் பிதற்றும்
ரத்தத்தின் ரத்தங்களே
எந்த அம்மாவாவது
தனது மக்கள்
குடித்தழிந்து சாகட்டும்
என்று நினைப்பாளா?
டாஸ்மாக்கின் விற்பனைக்கு
இலக்கு நிர்ணயிப்பாளா..?
அப்படி நினைப்பவளை
வாய்கூசாமல் அம்மாவென்று
அழைக்கும் உங்களை
என்னென்று சொல்வது
எதனால் அடிப்பது?
மக்களுக்கு
போதையை ஊட்டி
புத்தியை மழுங்கடித்து
அதில் கிடைக்கும் வருவாயினை
வைத்து நடத்தும் ஈனப்பிழைப்பை
என்று ஒழிக்கிறாளோ
அப்போதுதான் அவள் உண்மையான அம்மா
அதுவரை அவள் வெறும் சும்மா?

(நன்றி: கார்டூனிஸ்ட் பாலா)

Friday, March 7, 2014

ஒவ்வொரு பெண்ணும்..! - மகளிர் தின சிறப்புக் கவிதை!




பூமித்தாய் தன்னுள்
உயிர்ப்புடன்
விழுகின்ற
 எதனையும்
வேறுபாடு
காட்டாமல்
உயிரூட்டி
உரமேற்றி
வெளியுலகம்
காணவைப்பாள்!

உயிரற்று வீழ்பவற்றை
வேறுபாடு காட்டாமல்
தன்னுள்
அடக்கிக் கொள்வாள்!
பூமித்தாயைப் போலேதான்
இவ்வுலகில் உள்ள
ஒவ்வொரு பெண்ணும்
தன்னைச் சார்ந்தோரின்
நல் குணங்களை
வெளியுலகுக்கு எடுத்துக்காட்டி
தீயகுணங்களை தன்னுள் அடக்கி
அன்பு நிறை அன்னையாக
அடம்பிடிக்கும் சகோதரியாக
தோள் கொடுக்கும் தோழியாக
அறிவார்ந்த மனைவியாக
அழகு நிறை மகளாக
உருவெடுத்து வாழ்ந்து நிறைகிறாள்
ஆணினத்தை வாழவைத்து மறைகிறாள்!

(உலகிலுள்ள பெண்கள் அனைவருக்கும் எனது சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் மகளிரைப் போற்றுவோம்!)