கதிர்க் காதலனை காணாததால்
பசலை நோய் கண்ட
நிலா காதலி
தினமும் உடல் மெலிந்து
தேய்வதுபோல்
எனைக் காணாத
நோய் கண்டு
தேய்ந்து போகிறாள்
என் கலாபக் காதலி!
"இது தொலைவு தரும் தொல்லையா?
நினைவு தரும் தொல்லையா?"
என்று வினா தொடுத்தாள்...
விடை உன்னுள்ளே இருக்குதடி
உடலிங்கு திரிந்தாலும்
என்னுயிர் உன்னுள்ளே உலவுவதால்
இந்நோய் கண்டிருக்கும் என்றேன்
"பேச்சிலும் சரி மூச்சிலும் சரி
கவி வீச்சிலும் சரி
நீ வில்லாதி வில்லன்
எனைக் கவர்ந்த கள்வன்"
என்று சிணுங்கினாள்...
அந்த நொடியிலிருந்து நான்
தேயத் துவங்கினேன்..!
(இது எனது 400-வது கவிதைப் பதிவு... எனை நேசிக்கும் கவிதைக்கும்... காதலை சுவாசிக்கும் உலக காதலர்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்..!
இந்த 400-வது பதிவு வரை எனக்கு ஆதரவு தரும் என்னன்பு வாசக நண்பர்களுக்கு இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...!
அன்புடன்
மோகனன்)