அம்மா அடிக்க வருகையில்
வேட்டிக்குள் மறைய...
தூக்கம் வருகையில்
தோள் மீது உறங்க...
வீதி உலா போகையில்
விரல் பிடித்து நடக்க...
சகதோழர்களுக்கு இணையாக
சைக்கிள் பழக...
பள்ளிக்கு செல்லும்போது
பத்திரமாய் கொண்டு விட..
நீரூறும் பெருங்கிணற்றில்
நீச்சல் பழக...
அத்தனைக்கும் நீங்கள் தேவை
என்றன் தந்தையே...
அகவை எனக்கு நாற்பதாகினும்
அந்த சிறுபிராயம்
மீண்டும் வேண்டுகிறேன்...
உங்கள் மடியில்
மீண்டும் நான் துள்ளிவிளையாட!
காலனால் எனைப் பிரிந்து
மண்ணில் புதைந்து
மறைந்தீர்களே நியாயமா?
மறுஜென்மத்தில்
நம்பிக்கையில்லாதவன்
தந்தையே உங்கள் மகன்!
நடவாதெனினும்
உங்கள் மகனாகப் பிறக்கவே
இன்னொரு ஜென்மம்
வேண்டுகிறேன் இயற்கையிடம்!
நிலவாய் மாறி வெளிச்சம் தந்தாலும்
நீங்கள் இல்லா இவ்வுலகம்
இருளாக இருக்கிறது அப்பா!
தாயில்லா பிள்ளையிவன்
என்றறிந்தும்
தந்தையில்லா பிள்ளையாக்கிய
காலமே என்
தந்தையிடம் சொல்லிவிடு
எனது தந்தையர் தின வாழ்த்துகளை!