ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, May 10, 2013

விமலனின் காதலி! - 10: கவிதை வடிவில் ஒரு காதல் தொடர்!

தி.நகரில் உள்ள
ஒரு திருமண மண்டபத்தின் முன்
ஆட்டோ நிற்கவே
மண்டபத்தின் முகத்திலுள்ள
முகவரியை சரிபார்த்து
தரை இறங்கினான்
ஆட்டோ ஒட்டுனருக்கு
தரவேண்டிய
தொகையைத் தந்து விட்டு
அவருக்கொரு நன்றியை
உதிர்த்து விட்டு
உள்ளே சென்றான்
மண்டபத்தின் வாயிலில்
வாய் நிறைய
புன்னகையோடு
திசைகள் ஆசிரியர் குழு
வழங்கிய உபசரிப்பை
வணங்கி ஏற்றுக் கொண்டான்
உள்ளே ஐம்பது பேர்
அமர்வதற்கான
நாற்காலிகள் இருக்க
அதில் பாதி நாற்காலிகள்
காலியாகவே இருக்க
அதில் ஒன்றில் அமர்ந்தான்

அமர்வதற்கு முன்
அவன் கையில்
நிகழ்ச்சி நிரல் அடங்கிய
அழகிய கோப்புடன்
அந்த வாரத்தின்
திசைகள் இதழும் அளிக்கப்பட்டது
பத்திரிகையாளர்களுக்கான
பயிற்சிக் கூட்டம்
காலை ஒன்பது மணிக்கு
துவங்குமென
நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டிருந்தது
கடிகாரத்தைப் பார்த்தான்
நிகழ்ச்சி துவங்க
இன்னும் ஒன்பது நிமிடங்கள்
இருக்கிறதென்பதை
இயந்திரக் கூடு
இதயம் துடித்துக் காட்டியது
கையிலிருந்த திசைகள்
இதழைப் புரட்டினான்
மூன்றாம் பக்கத்திலேயே
இளம் பத்திரிகையாளர்களின்
பெயருடன் நிழற்படங்களும்
வெளியிடப்பட்டிருந்தது

அந்தாண்டில்
மாணவ பத்திரிகையாளர்களாக
நாற்பத்தி இரண்டு
மாணவர்கள் தேர்வு பெற்றனர்
அதில் நாற்பதாவது
ஆளாக விமலன் இருந்தான்
தன் நிழற்படம் கண்டு
மனமகிழ் கொண்ட
மறு நிமிடம்
நாற்பத்தியோராவது
நிழற்படத்தைக் கண்டதும்
இதயம் துடிக்க மறந்தான்
அச்சமயத்தில்
அவனருகில் அமர்வதற்கு
அழகுக் குயிலொன்று
அனுமதியைக் கேட்டது
அக்குயிலைப் பாராமல்
அனுமதியைத் தந்தான்
அந் நிழற்படத்தை
மீண்டும் ஒருமுறை பார்த்தான்
அங்கே தாமரை
புன்னகை பூத்திருந்தாள்
தன்னையறியாமல்
தாமரை என்று கூவினான்


மூன்றாமாண்டு
தமிழ் இலக்கியம் பயிலும்
முத்தமிழ் மாணவி
காஞ்சி அரசு கலைக்கல்லூரியின்
பேச்சுப்புயல் மான் கவி
என சிறுகுறிப்பு வரைந்தான்
குறிப்பினைப்
படித்துச் சிரித்தான்
குயிலின் படத்தினை
தடவி ரசித்தான்
தாமரை என
அழைத்துச் சிலிர்த்தான்
அவன் அழைத்த மாத்திரத்தில்
'ம்...ம்... சொல்லுங்கள்'
என்பது போல்
தாமரையின் குரலினை
அவன் செவியினிக்கக் கேட்டான்
'ம்...ம்... சொல்லுங்கள்
நான்தான் தாமரை..."
என மீண்டும் தாமரையின்
குரல்தனைக் கேட்டான்

தாமரையின் மயக்கத்தில்
மூழ்கியிருக்கும்
விமலனை
தளிர்க்கரம் ஒன்று
தட்டி எழுப்பியது
கைதட்டி எழுப்பியது
எழுப்பியது யார் என்று
விழித்துப் பார்த்தவன்
தன் விழி மூட மறந்தான்
அங்கே... அங்கே...
அழகுத் தாமரை
அமர்ந்திருந்தாள்
தங்கத் தாமரையாள்
அவனை எழுப்பியது கண்டு
தன்னை மறந்தான்
'ம்...ம்....நான்தான் தாமரை
ஏன் அழைத்தீர்கள்
சொல்லுங்கள்'
என மீண்டும் தாமரை
கேட்டபின்தான்
சுயநினைவுக்கு வந்தான்
பயிற்சி கூட்டம்
அப்போது துவங்கி விடவே
தற்காலிகமாக
தாமரையின் கேள்வியிலிருந்து
தப்பித்துக் கொண்டான்

பத்திரிகையாளர்களின்
பயிற்சிக் கூட்டத்தில்
பத்திரிகை உலகின்
அனைத்து அம்சங்களும்
விவரிக்கப்பட்டன
செய்தி சேகரித்தல்
இக்கட்டான சூழலை சமாளித்தல்
என நாற்பத்தி இரண்டு
மாணவர்களின் திறனும்
பட்டை தீட்டப்பட்டன
அனைத்து நிகழ்வுகளையும்
அச்சு பிசகாமல்
குறிப்பெடுத்துக் கொண்டான்
இடையிடையே
தாமரையை தன் கண்களால்
அளவெடுத்துக் கொண்டான்
உணவு இடைவேளை வந்ததும்
தனியிடம் நோக்கி சென்றான்
அவனிடம் நோக்கி
தாமரை வந்து கொண்டிருந்தாள்


(தொடரும்)






Thursday, April 25, 2013

விமலனின் காதலி! - 9: கவிதை வடிவில் ஒரு காதல் தொடர்!


நடுப்பக்கத்தில்
வெளியான செய்தி ஒன்று
அவனுடைய
நடு முதுகெலும்பை
நிமிர்த்தியது!
'பத்திரிகைத் துறையில்
முத்திரை பதிக்க
கல்லூரி மாணவர்களுக்கு
அரியதொரு வாய்ப்பு' - என
அதில் விளம்பியிருந்தது
அதைப் படித்த
அரை மாத்திரை நொடியில்
அவனது சிறு மூளை
சிலிர்த்தது...
'நச்சென்று நான்கு பக்க அளவில்
கட்டுரை வரைந்து
அனுப்புக...
தேர்ந்தெடுக்கப்படின்
மாணவ பத்திரிகையாளராகும்
வாய்ப்பைப் பெறுக' என்ற
வாக்கியத்தைப் படித்த நொடியில்
பெருமூளையும்
முகுளமும் அதற்கான
திட்டத்தை வகுத்தது

படிப்பு வாசமில்லா
குடும்பத்தில்
படிப்பினையே சுவாசமாமக்
கொண்டு வாழும்
விமலனுக்கு
இஃது ஓர் அரிய
வாய்ப்பெனத் தோன்றியது
தன் வாய்மையை
தன் நேர்மைத் திறமையை
தன் சமூகப் பொறுப்புணர்வை
உலகிற்கு உரத்துச் சொல்லும்
உன்னத வாய்ப்பாகத் தோன்றியது
சாமான்யத் திறமை கொண்டுள்ள
சாதாரண மனிதர்களையும்
சாதனை மனிதர்களாக
உலகிற்கு எடுத்துக் காட்டும்
அரிய வாய்ப்பாகத் தோன்றியது
அவ்வூர் அரசு மருத்துவமனையின்
அவலத்தை நான்கு பக்கங்களில்
தோலுரித்துக் காட்டி
'திசைகள்' இருக்கும் திசைக்கு
அனுப்பினான்

நாட்கள் நகர்ந்தன
திசைகள் இதழில் இருந்து
முதற்கட்டத் தேர்வில்
தேர்வாகியிருப்பதாகவும்
கோவை மாநகரில்
எழுத்துத் தேர்வு இருப்பதாகவும்
அழைப்புக் கடிதம்
அவனுக்கு அழகாய் வந்தது!
எழுத்துத் தேர்வு
எப்படி இருக்கும் என்றே
அறியாதவனுக்கு
கோவையில் நடைபெற்ற
எழுத்துத் தேர்வு
அவனுக்கு புதிதாய் இருந்தது
புத்திக் கூர்மை
தற்கால நிகழ்வுகள்
அரசியல் புரிதல்கள்
நகைச்சுவை அறிதல்கள்
என கேட்டிருந்த அனைத்து
கேள்விகளுக்கும்
அவன் பேனா பதில்களைத் தந்தது

இருபது நாட்கள்
கழிந்த பின்
இனிக்கும் செய்தி ஒன்று
அவன் இல்லம் தேடி
கடிதம் மூலம் ஓடி வந்தது
அக்கடிதத்தில்
'மாணவ பத்திரிகையாளராக
நீங்கள் தேர்வு
செய்யப்பட்டிருக்கிறீர்கள்
இதுகாறும் தாங்கள்
இருநாள் பத்திரிகையாளர் பயிற்சிக்கு
சென்னை வந்து சேர்க' என
அழைப்புதனை விடுத்திருந்தது
படித்ததும் அவனையறியாமல்
அவன் உதடு சிரித்தது
அவன் உயிரென நினைக்கும்
பெற்றோர்களிடம்
செய்தியை தெரிவித்தது
பெற்றவள் மனம் நெகிழ்ந்தது
பெற்றவர் மனம் மகிழ்ந்தது

மறுநாள் கல்லூரி
சென்றதும் தன்னாசிரியர்களிடம்
கடிதம்தனை காண்பித்தான்
நண்பர்களிடம் நற்தகவல்தனை
சொல்லி நகைப்பித்தான்
இனி விமலன் சாதாரணமானவன் அல்ல
பத்திரிகையாளர் விமலன்
என பூவை நட்பு ஒன்று
பூரிப்புடன் சொன்னது...
தமிழாசானிடம் காண்பித்தான்
'தாய்த் தமிழ்த்துறையில்
தமிழ் படித்திருக்க
வேண்டியவன் நீ
தடம் மாறி வரலாறு
படிக்கின்றாய் விமலா
இவ்வாய்ப்பு மூலம்
நீ வரலாற்றில்
தடம் பதிக்க வேண்டுமடா'
என வாழ்த்தினார்
அவன் வணங்கினான்


சென்னை செல்லும் நாளும் வந்தது
அதுவரை சென்னைக்கு
இரண்டு முறை சென்றிருந்தாலும்
இம்முறை செல்வது
அவனுக்கு அர்த்தமுள்ளதாய்த் தோன்றியது
பேருந்து அவனைத் தாலாட்ட
நிலவும் தன் பங்கிற்கு
வெளிச்சத்தை மறைத்து சீராட்ட
உறக்கத்தில் ஆழ்ந்தான்
கண் விழித்துப் பார்க்கையில்
பேருந்து சென்னையில் நுழைந்திருந்தது
இறங்குமிடம் வந்ததும்
கீழிறங்கினான்
அப்போது அதிகாலைக் கதிரவன்
கதிர்க் கரங்களை நீட்டி
அவனை வரவேற்க
மேலே எழும்பிக் கொண்டிருந்தான்!
ஆட்டோ ஒன்றைப் பிடித்து
பயிற்சி நடக்கும்
இடத்திற்கு போகச் சொன்னான்
ஆட்டோ அண்ணா சாலையில் சீற
வழி நெடுக சென்னையின்
பிரமாண்டம் அவனுக்கு பிரமிப்பைத் தந்தது
அவனுக்காக இன்னொரு
பிரமாண்டம் சென்னையில்
காத்துக் கொண்டிருந்தது







Wednesday, April 17, 2013

விமலனின் காதலி! - 8: கவிதை வடிவில் ஒரு காதல் தொடர்!


மாங்கனி மாநகருக்குள்
நுழைந்த பேருந்து
அதற்குரிய இடத்திற்குள்
தன்னை லாவகமாய்
செருகிக் கொண்டது..
தான் பயணிக்கத் துவங்கிய
இடத்திலிருந்து
கர்ப்பம் தரித்த அப்பேருந்து
தன்னுள் சுமந்த பயணிகளை
இறுதியாய் பிரசவித்தது...
அப்போது மாலைச் சூரியனும்
தன் நிறத்தைத் தொலைத்து விட்டு
செஞ்சாந்தைப் பூசிக் கொண்டு
மறையத் தொடங்கியது
கூடல் நகரிலிருந்து
நட்பூடல் செய்து வந்த
பறவைகளொவ்வொன்றும்
தம் இல்லம் செல்ல முயன்றது

பொருள் பதியும் பெரும்பார்வையோடு 
விமலனிடமிருந்து 
விடைபெற்றுக் கொண்டது
அப்பெண் பறவை
இருள் கவியும் நேரத்திலும்
இணைபிரியாமல்
தொடரும் தன் நிழலுடன்
தன்னில்லத்தை அடைந்தது
அந்த ஆண்பறவை
மருள் குவியும் பார்வையொடு
இதன் வருகைக்காக காத்திருந்த
அன்னைப் பறவை
அன்னம் இட்டது
முத்தக் கன்னம் இட்டது
அருள் பொழியும் முகத்தினொடு
இதைப்பார்த்த நிலாப் பறவை
வானிலிருந்து சிரித்தது...
உறக்கம் கண்ணைத் தழுவவே
நிலவும் இருளில் மறைந்தது


தே நேரம்
அவன் தலையெழுத்தை
மாற்றும் காகிதம்
அவன் ஊரை நோக்கி
தன்பயணத்தை துவக்கியிருந்தது
இதை அறியா
விமலனின் உணர்வுகள்
படுக்கையில் வீழ்ந்து கிடந்தது
இமைக் கதவுகளுக்குள்
அடைபட்டிருந்த கருவிழிகளோ
தாமரையால் சூழ்ந்து கிடந்தது
நித்திரா தேவி
அவனை இம்சித்துப் பார்த்தாள்
துவம்சித்துப் பார்த்தாள் - அவனோ
இமை கூடினானேயன்றி
இமை மூடினானில்லை
இவனுடன் போராட முடியா
நித்திரா தேவி
நித்திரைக்குள் ஆழ்ந்து விட
அவனோ தாமரையின்
நினைவுகளில் ஆழ்ந்து போனான்

பின்தூங்கி முன்னெழும் 
வெண்கதிரவனைப் போலே
விமலனும் பின் தூங்கி
முன்னெழுந்தான்
அனைத்து கடமைகளையும்
அடுக்கடுக்காய் 
முடித்து விட்டு தன்
அரசுக் கல்லூரி நோக்கி
பயணித்தான்
கல்லூரிக்குள் கால்வைத்து
மறுகணமே
தமிழாசான் குரல்
அவனை தடுத்து நிறுத்திற்று…
‘கவிதைப் போட்டி என்னாயிற்று விமலா?’
‘பூங்கவிதை ஒன்று
எனை வென்று விட்டதய்யா’
என விடை பகர்ந்தான்
‘முதல் தோல்வியை
இன்றுதான் காண்கிறேன்
ஆயினும் உன்னிடம்
தோல்விக் களையைக் காண்கிலேன்’
என்றுவிட்டு அவர் நடந்தார்

வழக்கம் போல்
அன்றும் கல்லூரி வகுப்புகள்
களை கட்டியது
இடை இடையே
நட்புகளின் சீண்டல்கள்
தோளைத் தட்டியது
வகுப்புகள் முடிந்ததால்
நூலகம் நோக்கி
கால்கள் நடை கட்டியது
மேசையில் கிடந்த
இதழ்களிலொன்று
வாவென்று அழைத்தது
தனை அழைத்த
இதழ்தனை பார்த்தான்
‘திசைகள்’ எனக் காட்டியது

தமிழகத்தின்
முன்னணி வார இதழ்களில்
முன்னணியில் இருந்த
இதழ் அது…
பல்வேறு இதழ்களுக்கும்
வளரும் பத்திரிகையாளர்களுக்கும்
திசை காட்டிய இதழ் அது
வழு வழு தாள்களின்
பிரபலங்களின் எண்ணங்கள்
அதில் வடிக்கப்பட்டிருக்கும்
பல்சுவைத் தகவல்கள்
அது கொட்டி இறைத்திருக்கும்
பிரபல ஓவியர்களின்
வண்ணத் தூரிகைகள்
வானவில் வண்ணங்களை
வாரி இறைத்திருக்கும்…
அவ்விதழைப் புரட்டிக் கொண்டே
வந்தவனின் பார்வை
அதன் நடுப்பக்கம் 
வந்ததும் நிலைகுத்தி நின்றது..!








Tuesday, April 16, 2013

மின் வெட்டு! - ஜாலி கவிதை


இதோ வருகிறேன்
அதோ வருகிறேன்
என்று சொல்லி விட்டு
அடிக்கடி காணாமல் போகிறாயே
நீயென்ன
என் வருங்கால
சம்சாரமா..?
இல்லை
தமிழ்நாட்டின்
மின்சாரமா..?

@@@@@@@@@@@@@

நீ கண்வெட்டிப்
போகும்
போதெல்லாம்
எனக்கு
தமிழ்நாட்டின்
மின்வெட்டுதான்
நினைவிற்கு வருகிறது...

@@@@@@@@@@@@@

மின்சாரத் துண்டிப்பால்
அடிக்கடி
இயக்கமிழக்கும்
இயந்திரத்தைப் போல்
உன் கண்சாரத்
துண்டிப்பால்
நானிங்கு
இயக்கமிழந்து போகிறேன்..!

@@@@@@@@@@@@@

(கோடை வெயில் கொளுத்தி அடிக்க, தமிழகமே மின்வெட்டால் திமிலோகப்பட, நான் மட்டும் சும்மா இருப்பேனா... மின்வெட்டை இப்படியும் நையாண்டியாக சுட்டலாம் என்பதை இங்கே நாசூக்காக எழுதியிருக்கிறேன்...

ஹி...ஹி... சும்மா ஜாலிக்கு இந்த மின்வெட்டு கவிதை..!)




Saturday, April 13, 2013

விஜயமே வருக..! - தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவிதை!




நனிமகள் நந்தனாண்டு நடை தளர்ந்தாள்
பனிமகள் தளிர்நடை வளர்ந்தாள் - பறக்கும்
சித்திரைத் தேரிலேறும் தமிழ் விசயாண்டே
முத்திரை பதிக்க வருக!

************(இஃது ஒரு வெண்பா முயற்சி)**************


ஆண்டாண்டு காலமாய்
அழுது புலம்பினாலும்
மாண்ட காலம் மீள்வதில்லை
ஆயினும்
எம் தமிழ்ப் புத்தாண்டுப்
பெண்ணோ
ஆண்டாண்டு காலமாய்
மீண்டு கொண்டிருக்கிறாள்
எனைப் போன்ற
தமிழ்ப் பித்தன்களை
மீட்டுக் கொண்டிருக்கிறாள்...

குழவியாய்
நடைபயின்ற
நந்தன ஆண்டு
இன்றோடு
விடை பெறுகிறது
கிழவியாய்..!
அவள் பெற்ற குழவி போல்
அடுத்து நடைபயில
வருகிறது
விஜய ஆண்டு...
வரவேண்டும் விஜயமே
வளம் பல வேண்டும்
தினமுமே..!

வருக வருக
விஜயமே வருக
தருக தருக
நலம் பலவே தருக
பருக பருக
தமிழ் அமுதே பருக
பெருக பெருக
தமிழ் புகழே பெருக
எழுக எழுக
தமிழர் வாழ்வே எழுக
வெல்க வெல்க
தாய்த் தமிழே வெல்க
வளர்க வளர்க
மனத நேயமே வளர்க
பொழிக பொழிக
மாதம் மும்மாரி பொழிக
வாழ்க வாழ்க
தமிழ்புத்தாண்டே வாழ்க..!

(எனது அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது முன்கூட்டிய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
ஏற்றத்தாழ்விலா சமுதாயம் மலர வேண்டும்

என வேண்டும்
உங்கள்
மோகனன்)




Friday, April 12, 2013

உன் பிறப்பால்..! - தோழிக்கு பிறந்தநாள் கவிதை

ண்டத்தில் சுற்றித் திரியும்
      துண்டங்களில் அழகினும் பேரழகிய
வெண்ணிலவாய் உருவெடுத்து
      பெண்ணிலவாய் பிறந்தாய் இன்று
னிலம், நீர், காற்று, வெளியென
      உன் பிறப்பால் களிப்பெய்திய நாளின்று
ஸ்வரமே நீ பிறந்த இந்நாள் மட்டும்
      இன்றி என்னாளும் உன்னாளாகட்டும்!


(என் அலுவலக தோழிக்கு நேற்று பிறந்த நாள். நான் அலுவலகத்தில் சோர்ந்திருக்கும் போதெல்லாம், எனை அன்போடு விசாரிப்பவர். நேற்றும் நான் அப்படி இருக்கவே, அவருக்கு நான் ஒருவாழ்த்து கூட சொல்லவில்லை. மாலையில் அவரே எனை அணுகி, ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டுதானே இருப்பீர்கள். அப்படி இருப்பதுதான் எங்களுக்குப் பிடிக்கும்  என்று, என்னை ஆசுவாசப்படுத்தினார்... அதன் பிறகே அவருக்கு வாழ்த்து சொல்ல விரும்பி, இக் கவிதை  மூலம் வாழ்த்தை சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ந்து போனார். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். 

இக்கவிதைகளின் ஒவ்வொரு வரிகளிலும் தடித்திருக்கும் முதல் எழுத்தை மேலிருந்து கீழாக படித்துப் பார்த்தால் என் தோழியின் பெயர் படிக்கக் கிடைக்கும்.)