ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, November 30, 2009

உன்னைப் போலவே அழகாய்த்தான்..!



தனியாக கிளைத்து
முளைத்திருக்கும்
என்னுடைய பல்லைப் பார்த்து
'அழகான தெற்றுப் பல்' என்றாய்..!
அழகற்ற எனைப் பார்த்து
'அழகின் சிகரமே' என்றாய்..!
என் சாதாரண நடையைக் கூட
'அழகு மயில்' நடையென்றாய்..!
ம்ம்ம்… உன்னைப் போலவே
அழகாய்த்தானிருக்கிறது…
நீ சொல்லும் பொய்களும்..!

                                               - மலர்விழி மோகனன்

(என்னைப்பற்றி என்னவளின் மனதில் உள்ளதை, அவளின் பேரில் வடித்த கவிதை)



Friday, November 27, 2009

கவிதை என்றாலே..!



கவிதை என்றாலே
பொய் என்பார்களே ..?
நீ மட்டும் எப்படி
உண்மையான கவிதையாக
என் கண் முன்னே நிற்கிறாய்..!



Thursday, November 26, 2009

பொல்லாத ஓர் இரவில்..! - மும்பை தாக்குதல் முதலாமாண்டு நினைவுக் கவியாஞ்சலி



பொல்லாத ஓர் இரவில்
பொல்லாங்கு செய்பவர்கள்
பல்லாக்கு தூக்கிகள் போல்
பதுங்கிய படி வந்திட்டார்…
பாகிஸ்தானிலிருந்து
பயங்கர ஆயுதங்களுடன்
மும்பையில் நுழைந்திட்டார்

அவர்களெண்ணத்தில்
அவல எண்ணங்கள் உதித்திருக்க
அதுவரை உதித்திருந்த
கதிரவனோ…
பயங்கர இரவைக் காணச்
சகியாமால்…
சட்டென்று மறைந்து போனான்…

சட சடவென்று
துப்பாக்கியால் சுட்டபடி
தீயவர்கள்
திகில் கொடுக்க…
மும்பை மாநகரம்
திடுக்கிட்டு விழித்தது…
திகிலில் உறைந்தது…

விட்டில் பூச்சிகளிடம்
வீரத்தைக் காட்டிய
ஈனப்பிறவிகள்…
ரயில் நிலையத்தில்
ரணகளத்தை காட்டிவிட்டு
நட்சத்திர விடுதிக்குள்
நரிகளைப் போல் நுழைந்தன…
கண்ணில் பட்டோரை
சடுதியில் கொன்றன…

உலகத்தின் பார்வை அனைத்தும்
இங்கு குவிந்திருக்க…
வெண்ணிலவும் இந்நிகழ்வை
வேதனையோடு பார்த்திருக்க
வெறியாட்டம் போட்ட
ஈனப் பன்றிகள்…
குதியாட்டம் போட்டன…

அப்பன்றிகளை வேட்டையாட
வேங்கைக் கூட்டமொன்று
புயலெனக் கிளம்பிற்று…
உயிரை துச்சமெனக் கருதி
கடமையை உயிரெனக் கருதி
பிற உயிர்களின் நலன்களைக் கருதி
அவ்வேங்கைகள் பாய்ந்து வந்தன…

ஊழல்வாதிகள் செய்த வினை
ஊடகங்கள் செய்த வினை
அத்தீயவர்களுக்கு
திட்டமாக…
வேங்கையின் தாக்குதல்கள்
விபரீதமாயிற்று…
வீரம் காட்டிய வேங்கைகள்
வீரமரணம் எய்தின…

இறுதியில்…
இன்னுயிர்களை ஈந்து
ஈனப்பன்றிகளை
அழித்தன…
இந்தியர் அனைவரும்
அமைதிப் பெருமூச்செய்தினர்…


உயிரினை இழந்தோர் பலர்...
அங்கே உறவுகளை
இழந்தோர் பலர்…
இறந்தவர்
பல மதத்தினராயினும்
அவர்களைக் காத்தது
இந்தியரன்றோ…

ஒற்றுமை காட்டிடும்
இத்தேசத்தில்
பிற நாட்டு
தே… மகன்களுக்கு
ஒற்று வேலை செய்தலாகுமோ…
நம் தேசத்தை
கூறு போட நினைப்பது தகுமோ…

இதற்குப் பின்னேனும்
விழிக்க வேண்டாமோ நாம்…
வீணர்களை விரட்ட
வேண்டாமோ நாம்…
இத்துன்ப நிகழ்வு நிகழ்ந்து
இன்றோடு ஆண்டொன்று

அழுது கரைந்தாலும்
உருண்டு புரண்டாலும்
உயிர்கள் மீளாது…
நம் உள்ளங்களோ கண்ணீர்
உகுக்காமலிருக்காது…
உயிர் நீத்த உள்ளங்களுக்கும்
மானம் காத்த மாவீரர்களுக்கும்
கண்ணீர் கவியாஞ்சலி செலுத்துகிறேன்
காணிக்கையாக்குகிறேன்…

போனவரை போகட்டும்
இனியொமொரு
தாக்குதலை…
இம் மண்ணில் நடத்த
விடமாட்டோம்…
மீறி நடக்க வைக்க முயல்பவர்களை
நசுக்கியெறிவோம்…

எச்சமர் வரினும்
அவனியில் அஞ்சாமாட்டோம்
அசகாய சூரனென்றாலும்
அடியோடு
அழித்தெடுப்போம்…

இது…
நம்நாடு…
நம்தேசம்...
நம் மக்கள்…
நாமனைவரும் இந்தியர்கள்…
என்ற எண்ணம் காப்போம்...
என்றும் இந்தியனாய் இருப்போம்...



மும்பை தாக்குதல் - முதலாமாண்டு நினைவு மரபுக்கவிதாஞ்சலி

 

தொம்பையி னாறிய தீயவர் திமிரோடு
மும்பையில் துட்டக் கால் வைத்தனர் – மேலும்
தும்பைப் பூ போன்ற உயிர்களை வதைத்தனர்
வம்பையும் விலைக்கு வாங்கினர்.

வேதனைக் குரல்கள் நாற்புறம் ஓலிக்க
கோதனைக் காக்கிளம் பியதரி மாப்படை
சோதனைத் தீர்க்க தம்மின்னுயிரை ஈந்து
சாதனை படைத்தவ்வெஞ் சமர்.

ஆயிற்றத் துன்பம் நிகழ்ந் தாண் டொன்று
போயிற்றோ நம்மனக் கவலைகள் - மாவீரர்களே..?
தீயிட்டழிக்கும் கொடும் தீவிரவாதி களையவ்
வாயிலினில் வைத்தே வதைத்திடும்.

                                                             
                                                                    - மோகனன்

(மும்பைத் தாக்குதல் நடைபெற்று...இன்றுடன் ஓராண்டு நிறைவு ஆகிறது... அவ்வெஞ்சமிரில் இன்னுயிரை ஈந்து பிற உயிர்களைக் காத்த மாவீரர்களுக்கு உங்களனைவரின் சார்பிலும் இந்த மரபுக்கவிதையினை கண்ணீர் அஞ்சலியுடன் சமர்ப்பிக்கிறேன்... இனியும் இதுபோன்ற துன்பியல்கள் இந்தியாவில் நடைபெறக்கூடாது என்ற நற்சிந்தனைகளுடன் உங்களிடம் இதைப் படையலிடுகிறேன்...)



Wednesday, November 25, 2009

அரபிக்கடல் போல..!



அரபிக்கடல் போல
அழகாய்த்தானிருக்கிறாய்..!
வங்கக் கடல் போல
வனப்பாய்த்தான் இருக்கிறாய்..!
இந்தியப் பெருங்கடல் போல
இன்பமாய்த்தான் இருக்கிறாய்..!
உன்னுடன் பயணிக்க வேண்டும்
என்ற ஆசை எனக்கு…
காதல் என்னும் படகைத்தான் காணோம்..?




காதலுக்குப் பிரசித்தம்..!



யானைக்குப் பிரசித்தம் மதம்..!
குதிரைக்கு பிரசித்தம் வேகம்..!
தண்ணீருக்குப் பிரசித்தம் தாமரை..!
பன்னீருக்குப் பிரசித்தம் வாசனை..!
பகலிற்குப் பிரசித்தம் சூரியன்..!
இரவிற்குப் பிரசித்தம் நிலவு..!
காதலுக்குப் பிரசித்தம் நீ..!
உனைப் பற்றிய
கவிதைக்குப் பிரசித்தம் நான்..!



Tuesday, November 24, 2009

உன் கடைக்கண் பார்வை..!




வானத்தில் ஏழு வண்ணங்கள்
சேர்ந்தால்…
அது வானவில்..!
நினைவில் பல எண்ணங்கள்
சேர்ந்தால்…
அது கவிதை..!
நிகழ்வில் நம் மனங்கள்
சேர்ந்தால்…
அது காதல்..! அதுதான் காதல்..!

"""""""""""""***""""""""""""

சூரியனின் பார்வை
பட்டால்தான்
இந்த உலகம் விழிக்கும்..!
சந்திரனின் பார்வை
பட்டால்தான்
அந்த இரவும் விழிக்கும்..!
உன் கடைக்கண்
பார்வை பட்டால்தான் பெண்ணே
என் காதல் விழிக்கும்..!

"""""""""""""***"""""""""""




Monday, November 23, 2009

என் தமிழாசானுக்கு... - மரபுக்கவிதை



குருகுல வாசம் பயிலவில்லை நின்பாதத்
திருத்தாழ் பணியவில்லையாயினும் - நீரெனக்கு
அருந்தமிழ்ப் பயில்வித்து ஐயம் நீக்கினீர்
மருந்தமிழே யுனை மறவேன்                        
                                                             - மோகனன்

(எனது சென்னை வாழ்விற்கு காரணமாயிருந்த, எனது இளங்கலை வகுப்பின் தமிழாசிரியர்களுள் ஒருவரான திரு. நல்லதம்பி ஐயா அவர்களை 21.11.2009 அன்று சந்தித்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு எனக்கு தமிழ்ப்பாடம் எடுத்தவர்.  இந்திய அளவில் பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் (UGC - NET Exam) தேர்விற்காக, அவரிடம் இன்று ( 21.11.2009)  மீண்டும் பாடம் படித்தேன். 


எனக்கமைந்த தமிழாசிரியர்களுள் சிறந்தவர் திரு. நல்லதம்பி ஐயா அவர்கள், அவருடன் தியாகராய நகருக்கு (அன்று மாலை 6.45 மணி அளவில்) பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது அவருக்காக எழுதிய வெண்பா வடிவில் எழுதிய மரபுக் கவிதை. அதை அவரிடம் கொடுத்தேன்... படித்து, பின் பாராட்டி மகிழ்ந்தார்...


அதே மகிழ்ச்சியை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்)




அரசியல்வாதியின் வேண்டுதல்..!



திருப்பதி ஏழுமலையானே...
இந்த (இடை)த்தேர்தலில்
என்னை நீ ஜெயிக்க வச்சா..?
எனக்கு ஓட்டு போட்ட
ஊர் மக்களுக்கு
மொட்டையடிச்சு
உனக்கு கிரீடம் சாத்துறேன்..!

(20.08.2004 அன்று காலை 9.30 மணியளவில் எழுதி வைத்த கவிதை, தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வரவிருப்பதால், இங்கே மீள்பதிவாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை கவிதையாய்...)




Friday, November 20, 2009

உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்..!



உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்
கடும் காடு மலை என்ன..?
சுடும் பாலைவனத்தில் கூட
நடந்து வருவேன்..!
உன் பூப்பாதங்களை தாங்கியபடி..!



Thursday, November 19, 2009

கண்கள் பேசுமா..? - காதல் குறுங்கவிதைகள்..!


கண்கள் பேசுவதை
எங்கும் நான்
கண்டதில்லை பெண்ணே..!
உன் கண்களை
நான் சந்திக்கும் வரை..!

* * * * *


நான் உற்சாகம் இழந்து
வீழும் போதெல்லாம்
உன்னை நினைத்தாலே போதும் கண்ணே..!
எனக்குள் உற்சாகம்
தானாக வந்துவிடும்..!
என் உடலுக்குள் புது வேகம்
பிறந்து விடும்..!

* * * * *

பூமி தன்னைத்தானே
சுற்றியபடி
சூரியனையும் சுற்றிக்
கொண்டிருப்பது போல…
என் உடல் இங்கே சுற்றினாலும்
என் மனசு எப்பொழுதும்
உன்னைத்தான்
சுற்றிக் கொண்டிருக்கிறது..!

* * * * *

உன் நாவில்
தேனூறுகிறதா என்ன..?
நீ பேசுவதைக் கேட்டாலே
என் காதுகளிரண்டும்
இனிக்கின்றனவே..!

* * * * *

உன் பெற்றோர்களே உனை
ஒரு ஓவியமாய் தீட்டியிருக்கும் போது..!
கவிஞனான நான் உன்னைப் பற்றி
என் மனதிற்குள் பெருங்காவியமே
தீட்டி வைத்திருக்கிறேன்...
நீ வந்து படித்துப் பார்ப்பாய் என..!

* * * * *

ஒரு பூக்கூடையே
பூ வாங்க வருவது
போலிருக்கிறது..!
நீ... பூ வாங்க
வரும் அழகு..!

* * * * *




Wednesday, November 18, 2009

அழகிய திருடிக்கு பரிசு..!



என் தூக்கத்தை…
என் பசியை…
என் கனவுகளைத் திருடிய
அழகிய திருடியே...!
இவைகளைத்
திருடிய உனக்கு
என்னையே பரிசளிக்கிறேன்…
எனை ஏற்றுக் கொள்வாயா..?



Tuesday, November 17, 2009

இல்லாதிருந்திருந்தால்..!



பசி என்று ஒன்று மட்டும்
இல்லாதிருந்திருந்தால்
மானுட வாழ்வில்
தேடுதல்கள் என்பதே
இருந்திருக்காது…
மரணம் என்று ஒன்று மட்டும்
இல்லாதிருந்தால்
இம்மண்ணில்
மக்கள் தொகையும்
குறைந்திருக்காது...
உன் காதல் என்று ஒன்று மட்டும்
எனக்குஇல்லாதிருந்தால்
என் பிறப்பின் பயனும்
தெரிந்திருக்காது..!



Monday, November 16, 2009

உனக்கு ரசிகனான பின்பு..!



நீ எழுதிய கவிதைகளுக்கு
நான் ரசிகையாகி
விட்டேனடா என்றாய்..!
அவைகளெல்லாம்...
உனக்கு நான்
ரசிகனான பின்பு
எழுதிய கவிதைகள்தான்
என்பதை
நீ அறிவாயா அன்பே..!



Friday, November 13, 2009

உதடுகளை மறைத்துக்கொள்..!



உன் செம்பவள உதடுகளை
மறைத்துக்கொள்
பெண்ணே..!
உன் இல்லமருகே இருக்கும்
ரத்தின வியாபாரியின்
கண்களில்
பட்டுவிடப் போகிறது..!
பிறகு அவன்
எனக்குப் போட்டியாக
வந்துவிடுவான்..!



Thursday, November 12, 2009

எங்கே கற்றுக் கொண்டாய்..?




என் மனமெனும்
காட்டுக் குதிரையை...
காதலெனும்
கடிவாளமிட்டு
உனதாக்கிக் கொண்டவளே…
எங்கே கற்றுக் கொண்டாய்
இந்த வசியக்கலையை..?
எனக்கும் சொல்..?
கற்றுக் கொள்கிறேன்..!



Wednesday, November 11, 2009

காதல்..!


காத்திருக்கிறேனடா... - உனக்காக

னித்திருக்கிறேனடா... - நீ

ல்லாமல் போனால் ல்லறமே எனக்கில்லையடா..!                                                     




Tuesday, November 10, 2009

ஏனடா நீ..?

உன் அன்பிலே
என் அன்னையைக் கண்டேன்…
உன் அறிவுரையிலே
என் தந்தையைக் கண்டேன்…
உன் ஆறுதல் வார்த்தையில்
என் தோழனைக் கண்டேன்…
இப்படி எல்லாமுமாய் வந்தாயே…
ஏனடா நீ...
என்னவனாக
வராமல் போனாய்…?

     

(என் அன்பிற்குரியவள்... எனக்காக எழுதிய கவிதை...)




மறையாத மின்னலென்று..!



''என் கார்மேகக் கூந்தலில்...
நான் பூ வைத்திருக்கும் அழகு
மூன்றாம் பிறையென்றாய் சரி..!
என் கூந்தல் நீளத்திற்கும்
பூ வைத்தால் என்ன சொல்வாய்..?''
சிறு அளவு பூ… 'மூன்றாம் பிறை'யெனில்
நெடு அளவு பூவிற்குச் சொல்வேன்
உன் கார்மேகக் கூந்தலில் அது
மறையாத மின்னலென்று..!   



Monday, November 9, 2009

நிலா தேவதை..!


இருண்ட வானில்...
திரண்ட மேகங்கள்
நட்சத்திரங்களைக் கண்டு கூட
மகிழாது..?
வெண்ணிலவைக் கண்டதும்
அதோ எங்கள்
நிலா தேவதை
வந்துவிட்டாளென்று
மகிழ்ந்து திரியும்…
உன்னைக் கண்டதும்
என் மனம்
மகிழ்ந்து திரிவதைப் போல..!



Thursday, November 5, 2009

நீ தொட்டு உயிர்ப்பித்தாய் என்பதற்காக..!



ஒரே ஒருநாள் மட்டும்
உயிர் வாழ்ந்தாலும்...
நீ தொட்டு உயிர்ப்பித்தாய் என்பதற்காக
உனக்காகவே உன் வீட்டு வாசலில்
காத்துக் கிடக்கிறது…
என்னைப் போலவே
நீ இட்ட மாக்கோலமும்..!



Tuesday, November 3, 2009

உன்னைப் போலொரு கவிதையை...



வெற்றுக் காகிதத்தில்
உனைப் பற்றி
ஆயிரம் ஆயிரமாய்
கவிதைகள் வடித்தாலும்
உண்மையில்...
உன்னைப் போலொரு கவிதையை
என்னால் வடிக்க முடியாது
என்பதை
திறந்த மனதோடு
ஒத்துக் கொள்கிறேன்..!



Monday, November 2, 2009

பொன்னாபரணங்களின்றி..!



பொன்னாபரணங்களின்றி
எளிமையாக இருப்பதுதான்
உனக்குப் பிடிக்கும் என்றாய்..!
ஆயினும் பெண்ணே
உன் நெற்றியில் பூத்துள்ள
வியர்வைத் துளிகளனைத்தும்
வெண் முத்துக்கள் போன்றும்...
உன் இதழின் ஈரத்தில்
பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி
வைரம் போன்றும் மின்னுகின்றனவே...
இந்த ஆபரணங்களை
நீ என்ன செய்யப் போகிறாய்..!