ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, December 31, 2012

கருவறையில் இருப்பது..! - புத்தாண்டு சிறப்பு கவிதை!



தோள் கொடு தோழா…
தோள் கொடு..!
தாய்மையைக் காக்க தோள் கொடு!

வாள் எடு தோழா…
வாள் எடு..!
பெண்மையைக் காக்க வாள் எடு..!

கருவறையைத் தாங்குவது
கோவில் எனில்
ஒவ்வொரு தாயும் கோவிலடா..!

கருவறையில் இருப்பது
கடவுள் எனில்
ஒவ்வொரு மனிதரும் கடவுளடா..!

பெண்மையில் இருப்பது
தாய்மை எனில்
ஒவ்வொரு பெண்ணும் தாயடா..!

தாயைப் பழிக்கும் நாய்களை ஒழிக்கும்
தாய்த்திரு நாட்டில்
பாலியல் கொடுமை ஏனடா..?

பெண்மையை காப்பதே
ஆண்மை என்பதை
மறந்தவன் காமுகனடா…

காமவெறி கொண்டு அலையும்
காமுக நாய்களை
வேட்டையாடுவோம் வாடா..!

காமுக நாய்களை சிறையிலடைத்து
விருந்து கொடுக்கும்
சட்டங்கள் வேண்டாம் போடா..!

குற்றம் செய்தவன் கொற்றவனாயினும்
அவன் குடலை உருவி
சுடலைக்கு அனுப்புவோம் வாடா..!

பெண்ணியம் காக்கும் சட்டங்கள்
வேண்டுமென்று
வெடித்து முழங்குவோம் வாடா..!

கற்பினை பொதுவினில் நிறுத்தி
கண்களில் கண்ணியம் பொருத்தி
பெண்மையை காத்திட வாடா..!

(பாலியல் வன்முறைக்கு ஆளாகி, இருதினங்களுக்கு முன் இறந்து போன தில்லி மாணவிக்காக மட்டுமல்ல, இந்த வன்முறைக்கு இலக்காகி, இலக்கற்றுப் போன ஒவ்வொரு பெண்ணிற்கும் இக்கிறுக்கல் சமர்ப்பணம். 

நமை ஈன்ற அன்னையும் பெண்ணே. நம்முடன் பிறந்த சகோதரியும் பெண்ணே.. நமை திருமணம் செய்யும் மனைவியும் பெண்ணே.. நமை சரிசமமாய் நடத்தும் தோழியும் பெண்ணே... நமக்கு பிறக்கும் மகளும் பெண்ணே... பெண்களின்றி ஆண்களில்லை. 

இனியொரு பாலியல் வன்கொடுமை இந்தியாவில் மட்டுமல்ல, இப்புவியில் இல்லாமல் செய்ய ஒவ்வொரு ஆண்மகனும் உறுதி எடுப்போம். ஏனெனில் ஆணினத்தால்தான் பெண்ணினம் சிலுவையில் அறையப்படுகிறது.

இனி ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் பெண்மையைக் காப்போம். ஆண்மையுடன் வாழ்வோம்...

உங்களனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2013)




Thursday, December 13, 2012

நவநீதன் மகனே..! - சிறப்புக் கவிதை




இருளைக் கிழித்துப் பிறந்த
நவநீதன் மகனே…
வளர்பிறையில் வளரும்
என் மருமகனே…
உன் வரவால்
என்னுள்ளம் துள்ளுதடா
உன்னாலென்
நண்பன் தந்தையானான்
என்ற மகிழ்வை விட
நானுந்தன் மாமனானேன்
என்பது கண்டு மகிழ்ந்தேனடா
நீ எங்களின் ‘மகிழ்’ தேனடா…

உன்னாலிங்கு
உன் அத்தை உள்ளம் பூரித்து
சிரிக்கிறாள் – உவகையால்
கவிதையாய் வடிக்கிறாள்..!
எத்தனை முறை அவள்
எழுதிப் பார்த்தும்
உனைப் போலொரு உயிர்க்கவிதையை
வடிக்க முடியாதென
உனை வாழ்த்தி மகிழ்கிறாள்
வருக எங்களின் இளவலே...
வளர்க நீயும் புவியிலே...
வாழ்க நீ பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!


(இன்று எனது ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணன் - கவிதா தம்பதிக்கு ஆண்மகவு பிறந்திருக்கிறது. அம்மகவின் வரவிற்க்காக இக்கவிதை..!)




Tuesday, December 11, 2012

மாபெரும் கவியே..! - பாரதியார் பிறந்தநாள் கவிதை!



பாட்டுக்கொரு புலவா! – என்றன்
பாட்டுடைத் தலைவா நின்றன்
சிகக் கோடிகளில் ஒருவன் – உன்றன்
கவிகளுக்கு அடியார்க்கு அடியன்!
தியாகத் தமிழ் திருவுருவே – விழியில்
     தீஞ்சுடர் செந்தமிழ்க் க(ன்)னலே..!
யாக்கையும் குருதியும் ஈந்தே – தமிழ்
     மொழிக்கே மாற்றம் தந்(தை)தாய்..!
ர்ரென்றாலும் நீயிங்கில்லை – அமிழ்
     தமிழ் கவியால் எங்களுள் வாழ்கிறாய்!

தேசத்தின் மாபெரும் கவியே – மொழியில்
விடுத்தாய் விடுதலைத் தணலே..!
ட்டத்தை உடைத்த ரவியே – பரங்கியன்
கொட்டத்தை அடக்கிய கவிப்புனலே..!
ம்மாநிலம் பயனுற வேண்டியே – தீயவற்றை
தீயிட்டழிக்கப் பிறந்த கவிச்சூரியக் கனலே..!


(தேசிய கவிஞர் பாரதியாரின் 130-வது பிறந்த தினம் இன்று. தமிழ் தேசம் இன்று சினிமாவின் பின்னால் போய்க்கொண்டிருக்க, சிற்சில தமிழார்வலர்களாவது பாரதியின் பின்னால் இருப்பது கண்டு மனம் ஆறுதல் கொள்கிறது. தேசியக் கவிக்கு இச்சிறுவனின் கிறுக்கல் சமர்ப்பணம். அவன் வழி தொட்டு வாழிய செந்தமிழ்..!)







Wednesday, December 5, 2012

சுவாச அறைக்குள்..!



இங்கிருக்கும் தென்றலே
என்னவனை தீண்டிவிட்டு
எனை வந்து சேர்வாயா..?
என்று என்னவள்
தீந்தென்றலை தூது விட்டாள்..!
அவளின்றி அணு உலையாய்
கொதித்துக் கொண்டிருந்த
என் தேகத்தில்
அவளைத் தீண்டிய தென்றல்
குளிர் காற்றாய் எனை மோதியது..!
குளிர வைத்த தென்றலை
அவளிடம் திருப்பி அனுப்ப மனமில்லை…
அவள் வாசத்தை
அது சுமந்து வந்திருந்ததால்…
அதை என் சுவாச அறைக்குள்
சிறை பிடித்தேன்…
என் கனவறையில்
அவளுக்குள் சிறைப்பட்டேன்..!

******

பூந்தென்றல் எனக்காக
தீந்தென்றலை தூது விட்டது
அவளைத் தீண்டிய தென்றலை
திருப்பி அனுப்ப மனமின்றி
சுவாச அறைக்குள் சிறைபிடித்து
உயிர் நிறைத்தேன்..!
அது உயிர் நிறை தேன்..!

******




Friday, November 30, 2012

விடியல்..!



அதிகாலை நேரத்தில்
கிராமத்தில்
சேவல் கூவினால்
அது விடியல்..!
அதுவே நகரத்தில்
கூவினால்
அது சமையல்...
நீங்கள்
நகரத்தினர்களே ஆயினும்
கிராமத்து சேவலாகவே
விழியுங்கள்...
உங்களுக்காக மட்டுமின்றி
உலகிற்கான விடியலை
தட்டி எழுப்பலாம்..!




Friday, November 23, 2012

யார் செல்வந்தன்?



உழைத்துக் களைத்த
உடலுக்கு...
உறக்கம் வந்தால்
இடமென்ன...
பொருளென்ன..
அசந்து உறங்க
ஆறடி இடமும்
ஆங்காங்கே கிழிந்த
கந்தல் துணி கூட போதும்!
ஆனால்
அவ்வுழைப்பாளிகளின்
இரத்ததினை உறிஞ்சிக் குடிக்கும்
பணக்கார ஓநாய்களுக்கு
பட்டுமெத்தை இருப்பினும்
பறிகொடுத்து தவிக்கிறான்
தூக்கத்தை…
இதில் யார் செல்வந்தன்?




Wednesday, November 21, 2012

குழந்தையின் தூக்கம்!



தேக்குமரத் தொட்டிலிலே
சந்தனத் தைலமிட்டு
பனிக்குளிர் காற்றை பரவவிட்டு
பணக்கார வீட்டுப் குழந்தையை
பதமாக தொட்டிலாட்டினாலும்
தூங்குவதற்கு நேரம் பிடிக்கிறது
இந்த பாழும் நகரத்திலே…

வேப்பமர நிழலினிலே
ஒரு சேலை முடிச்சிற்குள்
தூளி கட்டி போட்ட
பாட்டாளியின் குழந்தை...
தன் தாயின் வாசத்தை
சேலையில் சுவாசித்தபடி
சுகமாய் தூங்கிப்போகிறது
நான் வாழும் கிராமத்திலே…!

++++++++++++++++++++++++++++++++++++++

அன்பான நட்பு வட்டங்களுக்கு...

கவிதை எழுதி நெடுநாட்களாகி விட்டது. நேரமின்மையும் வேலைப்பளுவும் இதற்கு காரணம். தற்போது அச்சூழல்கள் எனை விட்டு சற்று விலகி இருப்பதாகத் தோன்றுகிறது எனக்கு. மீண்டும் அதே உத்வேகத்துடன் உங்களை இனி சந்திக்கிறேன் என் கவிதைகளோடு... மீண்டும் உங்களின் விமர்சனக் கணைகளால் எனை அரவணைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

என்றென்றும் அன்புடன்
உங்கள்
மோகனன்




Monday, August 20, 2012

உற்பத்தி செய்யும் விவசாயிக்கு...



அன்றோ…
விவசாயப் புரட்சி
எனும் பெயரில்
வீரிய உரங்களை கொடுத்து
விளைநிலங்களை பாழாக்கினார்கள்...
அன்றோ…
தொழிற்புரட்சி
எனும் பெயரில்
பெரும் தொழிற்சாலைகளைப் புகுத்தி
குறுநிலங்களை கூழாக்கினார்கள்…
இன்றோ…
ரியல் எஸ்டேட் எனும் பெயரில்
வளர்நிலங்களை வளைத்துப் போட்டு
கான்கிரீட் கூடுகளாக்கி வருகிறார்கள்…
இப்படி அன்னை மடியை
அனைவரும் கூறு போட்டால்
உலகுக்கே உணவுப்பொருளை
உற்பத்தி செய்யும் விவசாயிக்கு
அவனது அரைக்கோவணம் தவிர…
அரைக்காணி நிலம் கூட மிஞ்சாது..!

+++++++++++++++++++++++++++++
______________________________________

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்:விடமாட்டேன் உன்னை..!: திகில் தொடர்கதை - 10)





Thursday, July 5, 2012

என்னோடு சேராமல்..!



இப்பிறவியில்
என்னோடு சேராமல்
போனதால்
மறுபிறவியாலாவது
என்னை கரம்பிடிப்பாயாவென்று
என் கன்னியவள் கேட்டாள்…
கேட்டதும் என் கண்ணில்
அருவி வழியச் சொன்னேன்...
இங்கே இருப்பது வெறும்
உடல் கூடுதான்...
அப்படி ஒன்று இருந்தால்
அது உன்னோடுதான்…
இல்லையேல்
நான் என்றும் புதைக்கப்பட்ட
மண்மேடுதான்…
நம் காதல் என்றென்றும்
கலந்திருக்கும்
விண்ணோடுதான்..!
______________________________________


(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்:விடமாட்டேன் உன்னை..!: திகில் தொடர்கதை - 9)







Thursday, June 28, 2012

உன்னுள் புதைபொருளாய்..!


உனைக் கண்டதும்
கட்டற்ற காட்டாற்று
வெள்ளமாய் நான்...
அதில் மூழ்கித் திளைக்கும்
மோகனச் சிலையாய் நீ...
பல்லாண்டுகளாக மனதில்
புதைத்து வைத்திருந்த காதலை
யார் முதலில் வெளிப்படுத்துவது
என்ற போட்டியில் நாம்…
உணர்ச்சிகளின் பிரவாகத்தில்
நம் உயிர்கள் கரைந்து போக
உடலியக்கம் அனைத்தும்
உற்சாக மிகுதியில் உறைந்து போக...
உன் காதலைச் சொன்னாய்..
எனை காற்றில் நிறைத்'தாய்'
முத்தான என் முத்‘தாரமே’
அந்நாளில் இரண்டாம் உலகம் தந்‘தாய்’
மீண்டும் நான் புதி'தாய்’
பிறந்தது போன்ற உணர்வினை தந்'தாய்’
அணைப்பில் அழியா ஒவியமானாய்
அன்பில் அன்னையின் காவியமானாய்…
அன்பே உன் அன்பில்
அகழ்ந்து புதைந்து போகிறேன்
உன்னுள் புதைபொருளாய்..!

______________________________________

(என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை இங்கே திகில் தொடர்கதையாய் எழுதி வருகிறேன். படிக்க விருப்பமிருப்பின் இந்த இணைப்பை உயிர்ப்பிக்கவும்: விடமாட்டேன் உன்னை..!: திகில் தொடர்கதை - 9)





Monday, June 4, 2012

அன்பே அகிலா..! - பிறந்தநாள் கவிதை



அன்பே அகிலா- நீ
தத்தித் தத்தி நடைபயின்ற
காலங்கள் கரைந்து போயின..
தடம்பதித்து விளையாடும்
நதியைப் போல்
நான்காவது அகவையில்
நீ இன்று காலடி எடுத்து வைக்கிறாய்...
நல்லவற்றை உன்னோடு
கொண்டு சென்று
உயர்வு எனும் கடலில் கலப்பாய்...
உலகத்தை உய்விப்பாய் அகிலா...
உந்தையின் அவா இதிலா...
உமக்கென் பிறந்தநாள் வாழ்த்துக்களடா...

*******************

அன்பே அகிலா - நீ
அழகிய வான் முகிலா?
நீ வாலுவின் வாண்டு
என் மனதை வருடும் வண்டு
நீ பெயர்ச்சொல் குறும்பு- இனி
என் பெயர் சொல்ல விரும்பு..!

- அம்மு கணேசன்

*******************




Tuesday, March 6, 2012

வற்றாத அன்பொன்றே..! - என் ஆருயிர் நண்பனுக்கு திருமண வாழ்த்து கவிதை


என் ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணனனுக்கு மார்ச் 5, 2012 அன்று திருமணம் நடைபெற்றது... இவன், என் பள்ளிப் பருவ நண்பன்... என் வாழ்வில் என்னோடு தோள் கொடுத்து வரும் நண்பன்...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த திருமண வாழ்த்துக் கவி இதோ...



நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

என்ற குறளின் இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டு என் நண்பன் நவநீ என்கிற நவநீத கிருஷ்ணன்...

என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!

(இப்படத்தில் உள்ள கவிதையின் முதல் (தடித்த) எழுத்துக்களை மேலிருந்து படித்துப் பாருங்கள்..! இல் வாழ்க்கையில் இணைந்துள்ள, வசந்த காலப் பறவைகளின் பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?)




Saturday, January 14, 2012

பொட்டிட்ட புதுப்பானையில்..! - பொங்கல் வாழ்த்து கவிதை



பொட்டிட்ட புதுப்பானையில்
பொங்குகின்ற பொங்கல் போல்
தங்க மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்விலும்
தமிழ் நகை பொங்கட்டும்..!

பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின் வாழ்வில்
வெற்றிகள் குவியட்டும்..!

சூரியனார்க்கு நன்றி சொல்லும்
சுந்தரமான பொங்கல் பொல்
சூதில்லா மனம் கொண்ட
சுத்தமான தமிழர்களின் வாழ்வில்
சுகவாழ்வு பெருகட்டும்..!

தரணியை தழைக்கச் செய்யும்
தைமகள் பிறப்பிற்கும்
எருதின் உழைப்பிற்கும் நன்றி சொல்லும்
நல்மனம் கொண்ட தமிழர்களின் வாழ்வில்
நலம் பல திரளட்டும்...
நன்மைகளே விளையட்டும்..!

புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்
பொங்குக தமிழ்ப் பொங்கல்..!
பொங்குக எங்கும் மகிழ்ச்சிப் பொங்கல்..!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எனது அன்பு நண்பர்களாகிய உங்களனைவருக்கும் எனது இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

என்றென்றும் அன்புடன்

மோகனன்.