ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Friday, December 13, 2013

முத்தாரக் கவியெடுத்து..! - பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை



முத்துத் தமிழெடுத்து முத்தாரக் கவியெடுத்து
உன் மாமன் வருகிறேன் பிறந்தநாள் வாழ்த்துப் பாட
குயிலாய் குரல் கொடுக்கும் குழவியாயிருந்த நீ
இன்றோடோராண்டை எட்டுகிறாய் மருமகனே- உனக்காக
ந்திர லோக சபையை நான் கூட்டட்டுமா..!
மாமன் முதுகிலேற்றி உலகைக் காட்டட்டுமா..!
ங்க நண்பனுக்கு தப்பாமல் நீ பிறந்தாய்..!
தங்க மகனென்று போற்றிடவே நீ வளர்வாய்..!
ன்று மட்டுமன்று என்னாளும் ஊருலகம் உனைப்
போற்றும்படி வாழ்வாங்கு வாழ்கவென் மருமகவே!
*********************************************************************************
 (எனது ஆருயிர் நண்பனும், எனக்கு தோள் கொடுக்கும் தோழனுமான வ.நவநீதகிருஷ்ணனின் மகனாகிய எனது மருமகனுக்கு இன்று முதல் பிறந்தநாள். அவனுக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை. பிறந்தநாள் கொண்டாடும் எனது மருமகனின் பெயர் தெரியவிரும்பினால் கவிதை வரிகளில் தடித்த எழுத்துக்களில் இருப்பவற்றை மேலிருந்து கீழாகப் படித்துப் பாருங்கள்... குதுகலமாய் உங்கள் நாவில் உலா வருவான் என் மருமகன்...)
************************************************************************************************** 

நானெழுதிய புதிய சிறுகதை
: என்னப் பெத்தவரு




Thursday, December 12, 2013

கைநாட்டு ஆன படிப்பாளிகள்




எம்.டெக்., பி.டெக் என
உயர்படிப்பு படித்தவர்களைப்
பார்த்துப் பார்த்து பணிக்கு எடுத்த
பன்னாட்டு நிறுவனங்கள்
அப்படிப்பாளிகளை
அனுதினமும்
கைநாட்டுக்காரர்களாக்கி விட்டன
அலுவலக வாயிலில்
விரல் ரேகை வருகைப் பதிவு கருவி! 

*******************************************************

நான் எழுதிய புதிய சிறுகதையைப் படிக்க... என்னப் பெத்தவரு  




Monday, November 11, 2013

சிக்கல்..!


சுட்டெரிக்கும் சூரியனைக் கூட
நேருக்கு நேராய்
பார்த்து
விடுகிறேன்...
ஆனால் உன் சுட்டு விழியை
என்னால் பார்க்க முடிவதில்லையே
அது எப்படி?
உன் மொழி ஈர்ப்பு விசையில் கூட
வீழாமல் இருக்கிறேன்
உன் விழி ஈர்ப்பு விசையில்
வீழ்ந்து போகிறேனே
அது எப்படி..?
கம்பீரமாய் எப்போதும்
கண் பார்த்து பேசும் எனை
கண்கட்டி வித்தைபோல்
மண் பார்த்து பேச வைத்தாயே
அது எப்படி?
இப்படி என்னுடைய
அடையாளங்களெல்லாம்
உன்னுடைய ஒற்றைப் பார்வையில்
தடுமாறிப் போகிறதே
அது எப்படி 
என்ற
குழப்பச்சிக்கலில்
நான்
குறும்புச் சிரிப்பில் நீ..! 
-------------------------------------------------

(அன்பர் வே. நடனசபாபதி கேட்டதற்கு இணங்க 'சிக்கல்' எனும் தலைப்பில் இக்கவிதை..  அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கருப்பொருள் 'காதல்'. வேலைப்பளு காரணமாக கவிதை எழுதவதற்கு தாமதம் ஆகிவிட்டது... என்று பொய்யுரைக்க விரும்பவில்லை... இத்தலைப்பில் கவிதை தோணாமல் ஒருவாரம் தவித்துப் போனேன். பின்னர் அழகான கவிதையைப் பார்த்ததும் கிறுக்கி விட்டேன்...)



Blogger வே.நடனசபாபதி said...
உண்டியல் கருத்தும் கவிதையும் அருமை. நீங்கள் கேட்டதால் நான் தருகிறேன் தலைப்பு. ‘சிக்கல்’ என்பதே அது. காத்திருக்கிறேன் கவிதையைப் படிக்க!
October 30, 2013 at 3:35 PM
 Delete




Wednesday, October 30, 2013

உண்டியல்


நீ என்னை சந்தித்துவிட்டு
செல்லும் ஒவ்வொரு முறையும்
உன் நினைவுச் சேகரங்களை
என் மனமெனும் உண்டியலுக்குள்
சேர்த்து வைக்கிறேன்...
என்றேனும் ஒருநாள்
அந்த உண்டியலை
திறந்து பார்க்க மாட்டாயா
என்ற நப்பாசையில்..!

(உண்டியல் என்ற பெயரில் கவிதை எழுத வேண்டும் என்று ஒரு வாசகரின் வேண்டுகோள். அதில் காதலைக் கொண்டுவரமுடியுமா என்று சவால் விட்டார். முயற்சித்துப் பார்ப்போமே என்று கிறுக்கியதுதான் இது...

இதுபோன்ற சிக்கலான தலைப்பினை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்... அதில் என்ன கருப்பொருள் வரவேண்டும் என்ற சவாலுக்கு நான் தயார்... நீங்கள்..?)




Tuesday, October 29, 2013

சிலந்தி வலை..!


தன்னுயிர் தழைக்க
தன்னுடலை உருக்கி
உமிழ்நீரைப் பெருக்கி
இல்லத்தைக் கட்டும்
சிலந்தியின் வலையைப் போல
உன்னுடலை வருத்தி
உன்னன்பைப் பெருக்கி
உனக்காக வாழாமல்
எனக்காக எல்லாவற்றையும் செய்து
எப்போதும் உன்னையே
நினைக்க வைத்திருக்கும்
உன்னுடைய அன்பு கூட
ஒருவித சிலந்தி வலைதானடி..!




Wednesday, October 23, 2013

குளிர் தென்றல்!


நடுங்கும் பகல்
பொழியும் மழை
சோம்பல் மேகங்கள்
ஆம்பல் சூரியன்
நடுக்கத்தில் பறவைகள்
ஒடுக்கத்தில் அணிற்பிள்ளைகள்
தங்களுக்குள் தலை புதைக்கும்
நாய்க்குட்டிகள்
கதகதப்பைத் தேடும்
பூனைக்குட்டிகள்
மழையில் முகம் கழுவும்
சாலையோர பூஞ்செடிகள்
தார்ச்சாலையில்
நெளியும் வானவில்கள்
நடைபாதை ஓரத்தில் திடீரென
முளைக்கும் கண்டத் திட்டுகள்
மழை நீரில் கப்பலாகும்
இலைச் சருகுகள்!
என இந்த மாரிக்காலத்தில்
எல்லாவற்றையும்
ரசித்துக் கொண்டிருக்கும் போது
திடீரென்று மோதும்
குளிர் தென்றல் காற்றில்
எனை நான் மறப்பது போல்
உன் வாசம் வீசும்போதும்
என்னை நான் மறந்து போகிறேன் அன்பே!




Monday, October 21, 2013

நீ ஒரு கொலைகாரி..!


என் உள்ளத்தை
கொள்ளையடித்த
கொள்ளைக்காரி என்றுதான்
உன்னை நினைத்திருந்தேன்!
என் உறக்கத்தை
கொலை செய்தபோதுதான்
நீ ஒரு கொலைகாரி
என்பதை கண்டுகொண்டேன்!
என்னை கொள்ளையடித்தது
மட்டுமின்றி
எனக்காக கொலையும்
செய்த காரணத்தால்
என் இதயச் சிறையில்
உனக்கு ஆயுள் தண்டனை
விதிக்கிறேனடி!




Friday, October 18, 2013

இரவினைத் தூங்க வைத்து!


இரவினைத் தூங்க வைத்து
இமைகளை விழிக்க வைத்தாய்!
கனவினைத் தூங்க வைத்து
கண்களை திறக்க வைத்தாய்!
நிலவினை தூங்க வைத்து
உன் நிலா முகம் காண வைத்தாய்!
நட்சத்திரங்களை தூங்க வைத்து
நமட்டுச் சிரிப்பை சிதற வைத்தாய்!
கருமேகங்களை தூங்க வைத்து
கவிதையை கிறுக்க வைத்தாய்!
என் துன்பத்தை தூங்க வைத்து
இன்பத்தை நுகர வைத்தாய்!
இத்தனையும் தூங்க வைத்தவளே
எப்போது எனை உன்
இதயத்தில் தூங்க வைப்பாய்?




Tuesday, October 15, 2013

உன் விரல் தொட்டு...



என் மடிக்கணினிக்கு
உன் விரல் தொட்டு
உயிர் கொடுத்தாய் என்பதற்காக
இன்றுவரை
அதன் இயக்கத்தை
நிறுத்தாமலேயே இருக்கிறேன்!




Saturday, October 12, 2013

அழகிற்கே இலக்கணம்!


பேச்சு மொழிக்கு இலக்கணம்
கற்றுத் தேர்ந்த நான்
உன் மௌன மொழிக்கு
இலக்கணம் தெரியாமல் திண்டாடுகிறேன்!
கம்பீர நடை பயின்று
தேர்ந்த நான்
உன் தளிர் நடையில்
தடுமாறுகிறேன்!
முல்லைக் கொடியின் அசைவில்
முறுவல் பூக்கும் நான்
உன் கொடி இடை அசைவில்
மூர்ச்சையாகிப் போகிறேன்!
கருநாகமே வந்தாலும்
அதை மயக்கும் திறன் கொண்ட நான்
உன் கருநாகக் கூந்தலில்
மயங்கிப் போகிறேன்!
சிட்டுக்குருவிகளின்
சிருங்காரப் பேச்சில் சிலாகித்த நான்
உன் சிக்கனப் பேச்சில்
சித்தம் சிதறிப் போகிறேன்!
கூடல் நகரில் பிறந்து
மாநகரையே மயக்கும்
சங்கத் தமிழே..!
சங்கீதத் தமிழே..!
உனைக் கண்ட பின்புதான்
அழகிற்கே இலக்கணம்
எதுவென்பதை அறிந்து கொண்டேன்!
அதன்படி ரசிக்கவும் கற்றுக் கொண்டேன்!




Tuesday, September 24, 2013

இதயத்திற்கு நல்லது!


சாப்பிட உட்கார்ந்தேன்
என்னவள் பரிமாறினாள்
வழக்கத்திற்கு மாறாக
தயிர் சாதம் பரிமாறினாள்
புருவத்தை கேள்விக்கணையாக்கினேன்
கேள்வியைப் புரிந்து கொண்டவள்
'தயிரை சேர்த்துக் கொண்டால்
இதய நோய் வராதாம்...
ஆதலால் தயிரை
சேர்த்துக் கொள்ளுங்கள்'
என்றாள் வாஞ்சையாக...
மெல்லச் சிரித்து
மெல்லியாளிடம்
'எனக்கிது தேவையில்லை
என்னிடம் இதயமே இல்லை' என்றேன்
'உங்கள் இதயம்
உங்களிடம் இல்லை என்பது
எனக்குத் தெரியும்!
என் இதயம் உங்களிடத்திலிருக்கிறதே
ஆதலால்தான் சொன்னேன்
அதிகம் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றாள்!




Monday, September 16, 2013

பிறைநிலவே உன்னழகில்..! - பிறந்தநாள் வாழ்த்து


பிறைநிலவே உன்னழகில் பெரும் பித்தானோம்
       வளர்நிலவே உன்னுயிரில் குறும் வித்தானோம்!
சிப்பதெனில் உன் குறும்பைத் தவிர வேறேதுமில்லை
      ருசிப்பததெனில் உன் அரும்பு மொழிக்கு நிகரேதுமில்லை!
திரும்பும் திசையெல்லாம் தீங்கரும்பே நீயானாய்
      எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் சேயானாய்!
க்குவலயத்தில் இன்றோடு நீ பிறந்து ஆண்டொன்று
     இந்நாளை கொண்டாடி மகிழ்கின்றோம் என்றும் நன்றென்று!
ஷாஸ்திரம் பாராமல் சம்பிரதாயம் பாராமல் பாரதியின்
      புதுமைப் பெண்ணாய் என்றென்றும் நீ வாழ்க வாழ்கவே!


(எனது தோழியின் மகளுக்கு இன்று முதலாமாண்டு பிறந்தநாள்... அந்த அன்பு செல்லத்திற்கு என் பாசம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! அந்த குட்டி செல்லத்திற்காக நானெழுதிய கவிதை இங்கே... அந்த குட்டி செல்லத்தின் பெயரை, இக் கவிதையில் தடித்த எழுத்துக்களில், மேலிருந்து கீழாக அமைத்து எழுதியிருக்கிறேன்...)




Wednesday, August 28, 2013

வலிந்து விரட்டு வலியை..! - தோழிக்கு பிறந்தநாள் கவிதை!

 

பல்லாண்டுகளுக்கு முன்
தாயின் கருவறையில்
ஆலம் வித்தானாய்...
உன் தந்தையின்
மன அறையில்
சிப்பிக்குள் முத்தானாய்..!
ஈன்றெடுத்த போது
இழைந்தோடும்
இசையானாய்..!
வளரும் போது
வருடி விடும்
தென்றலானாய்..!
பூச்சூடும் பருவத்தில்
மணம் வீசும்
பூஞ்சோலையானாய்..!
கல்லூரி பருவத்தில்
வானம் சுற்றும்
வானம்பாடியானாய்..!
விதியின் விளையாட்டில்
விளையாட்டு
பொம்மையானாய்..!
காலம் மாறிற்று
காட்சிகளும் மாறிற்று...
பொம்மை பெண்மையானது
உண்மை வண்மையானது
சுதந்திர உலகம் இனி உனக்கானது..!
வலியில் பிறப்பது வாழ்க்கை
வலிந்து விரட்டு வலியை
வசந்தம் இனி பின்பற்றும் உன் வழியை..!
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் நிலவுக்கு
முதல் பிறந்தநாள் இது..!
இன்னாள் போல் இனி என்னாளும்
வாழ்க நீயும் நலமோடு
வாழ்த்துகிறேன் நானும் மனதோடு!

(என் அன்புக்குரிய தோழி பொன். விமலாவிற்கு இன்று பிறந்தநாள்... அவருக்காக நான் எழுதிய கவிதை இது...

உலகின் எல்லா மகிழ்ச்சிகளும் உன் காலடியில் விழட்டும் விமலா...

என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!)




Monday, August 19, 2013

மறவேன் இனி..!


நான்காண்டு காலம்
ஒன்றாய்ப் பழகி
ஒன்றாய்த் திரிந்து
ஒன்றாய் மகிழ்ந்து
ஒன்றாய்க் குலாவிய நட்பினை
நிஜத்தில் பின் தொடர்ந்தேன்...
பள்ளிக்காலம் முடிந்த பின்
எங்களைப் பிரிக்க முடியாமல்
பிரித்தது காலம்…
எனை தனிப் பித்தனாக்கியது
அக்கோலம்?
எத்திசையில் இருப்பினும்
நட்பின் வாசம் தேடி
நாயாய் நான்
பல்லாண்டுகளாய் அலைந்த போது
இன்றுதான் அவனை
நிழலாய் பின்தொடரும்
வாய்ப்பு கிடைத்தது
முகநூலிலும்
சிட்டுக்குருவியின் கீச்சலிலும்…
இந்நாளை மறவேன் இனி…
அதற்கு காரணம் இரண்டு!
நான் தொலைத்த நான்காண்டு நட்பு
பல்லாண்டுகளுக்குப் பிறகு
இன்று ஐந்தாமாண்டில்
அடியெடுத்து வைப்பது ஒன்று...
என் கவிக்குடிலுக்கு இன்றோடு
அகவை ஐந்தென்பது மற்றொன்று..!




Wednesday, August 7, 2013

பத்திரிகை தர்மம்?


'பிளாஸ்டிக்கை ஒழிப்போம்'
என்று கவர் ஸ்டோரியில்
செய்தி வெளியிட்ட
பிரபல வார இதழ்கள் 
எல்லாம் 
அதே இதழை
பிளாஸ்டிக் கவரில் இட்டு
இலவசமாக ஷாம்புவின் சாஷேவையும்
தந்து கொண்டிருக்கின்றன!
இதுவன்றோ 
பத்திரிகை தர்மம்..!?

************************************************************
நான் எழுதிய கட்டுரைகள்
பள்ளிகளில் சாதியைக் குறிப்பிடத் தேவையில்லை! - அரசாணை குறித்த முழு தகவல்கள்
சாதி இல்லை - நெஞ்சை நெகிழச் செய்த வாசகர் கடிதம்




Friday, July 19, 2013

நீ மகளாகப் பிறந்திருக்கிறாய்! - பிறந்தநாள் கவிதை


உன் அன்னைக்கு
நீ மகளாகப் பிறந்திருக்கிறாய்
என்பதை விட
என் அன்னையே
என் மகளாகப்
பிறந்திருக்கிறாள் என்பதே
உண்மை என
உணர வைத்த தாயே

எங்கள் உயிர் மகள் நீயே!

நீ பிறந்த இந்நாளில்
இதயம் முழுதும்
இன்பம் பொங்குதடா!
அப்பா என நீ
எனை அழைக்கும் போது
என் ஆயுள் கூடுதடா!
என் மகளே... எங்கள் உயிரே...
நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு..!

உன் அன்னையைப் போல்
கற்பூர மூளையடா உனக்கு
எனையும் குழந்தையாக்கும்
குதூகலக் குறும்படா உனக்கு
மயில் தோகையைப் போல்
படரும் கூந்தலடா உனக்கு
புள்ளி மானைப் போல்
துள்ளும் நடையடா உனக்கு
மலரும் தாமரையைப் போல்
மனம் நிறையும் சிரிப்படா உனக்கு
உனை மகளாய் பெற்றதில்
மகிழ்ச்சி உனக்கல்லடா எனக்கு!




Thursday, July 18, 2013

வாலிபக் கவிஞரே வாலி! - இரங்கல் கவிதை


வாலிபக் கவிஞரே வாலி
வாழ்வாங்கு வாழ்ந்தவரே வாலி - நீ
தமிழ்க் கவியில்
நுண்மாண் நுழைபுழம் மிக்க ஆழி!
காதல் பாடல்களில்
எம் மனதைத் தாலாட்டும் தூளி!
சோகப் பாடல்களில்
மனதை கவிழ்த்துப் போடும் சோழி!
தத்துவத்தில்
எம் மனதை ஆழ உழும் மேழி!
வீரத்தில்
எமை தட்டி எழுப்பும் சேவற்கோழி!
காவியத்தில்
எமைக் கவர்ந்த அறி வாளி!
நீ மறைந்தாலும்
உம் வரிகள் இவ்வுலகில் வாழி வாழி!




Friday, July 5, 2013

எது உண்மையான அன்பு? - இளவரசன் மரணம்


தர்மபுரி காதல்
இன்று கண்ணீரில்
கரைந்து போனது...
காதலின் அடிப்படையே
அன்புதானே...
அந்த அடிப்படையையே
ஆட்டம் காண வைத்து விட்டதே
இந்த சாதி வெறி!
இது தகுமா..?
பூமி தாங்குமா..?

உலகில் தூயது
என்றால் அது அன்பு
மட்டுமே...
வாழும் அன்பு மட்டுமே
அதற்குப் பிறகே
மற்றவை எல்லாம்..!
இக்காதல்
கண்ணீரில் கரைந்தற்கு
வாழும் அன்பல்ல
பாழும் அன்புதானே காரணம்

இக்காதல்
துன்பியல் சம்பவத்தில்
மற்றவர்களின் அன்பெல்லாம்
அன்புதானா? - என
அன்பு மீதே
சந்தேகம் கொள்ள
வைத்துவிட்டதே?
இது சரிதானா?

மகளின் அன்பு
காதலில் நிறைந்து
கல்யாணத்தில் முடிந்தது
அவள் தந்தையின்
அன்போ
சாதிமேல் திரிந்து
சுய கொலையில் முடிந்தது...

கணவர் இறந்தாரே
என அவரின்
ஆருயிர் மனைவி
உயிர் துறக்கவில்லை
இதுதான் அவர் மேல்
அவர் மனைவி கொண்ட அன்பு?!
தந்தை போனாரே
என மகளும் மரிக்கவில்லை
இதுதான் அவர் மேல்
அவர் மகள் கொண்ட அன்பு?!

காதல் மனைவி
'தன்னுடன் வாழேன்' என்றதற்காக
தன்னுயிர் பிரிந்தான்
இளவரசன்...
இதுதான் காதல் மனைவி
மேல் அவன் கொண்ட அன்பு!
சாதி எனும் இரண்டெழுத்து
அன்பு எனும் சக்தி
வாய்ந்த மூன்றெழுத்தை
வென்று விட்டதே..?
என வெம்புகிறது அன்பு...
இதில் எது உண்மையான அன்பு?!?
செல்லுங்களடா
சாதிவெறி பிடித்த மிருகங்களே..!




Thursday, July 4, 2013

காதலாகிக் கசிந்துருகி..! - இளவரசன் மரணம்


காதலாகிக் கசிந்துருகி
கண்ணீர் மல்கி
கன்னியினைக்
கரம் பிடிக்க முயன்றான்
காளையவன்
இளவரசன்
கன்னியும் அவனைக்
கைப்பிடிக்க
முன் வந்தாள்..!

காதல் மனங்கள்
சதிபதியாய்
இணையத் தடை
வந்தது
சாதி எனும்
எமன் வடிவில்..!
எதுவரினும் இருவரும்
சமர் புரிவோமென
புரட்சித் திருமணத்தினை
தாமாகவே செய்து கொண்டனர்

இருமனம் இணைந்தது
குற்றமெனக் கருதி
சாதி வெறிபிடித்த
ஓநாய்கள் ஓலமிடவே
கன்னியின் தந்தை
தன்னையே
கொலை செய்துகொண்டார்
அப்போது வெடித்தது கலவரம்
எளியோரின் கிராமத்தில்
நீண்டது
வன்முறைக் கரம்
சாதித் தீ மூண்டதால்
அக் கிரமாம்
அக்கிரமக்காரர்களால்
ஆனது தீக்கிரை...

சாதீய ஓநாய்கள்
தொடர் ஊளையிடவே
அங்கு காட்சிகள் மாறின
சாதீயக் கட்சிகள்
அறிக்கையில் ஊறின
மிரட்டும் பாணியில்
ஓலம் ஊதின
கன்னியின் அன்னை
அழுது புலம்ப
அன்னை மடிதேடி
அவளும் கிளம்ப
அவனோ வெட்டி விடப்பட்ட
மொட்டை மரமானான்
தனித்து விடப்பட்ட
பாலை நிலமானான்

மனம் தளரா விக்கிரமாதித்தன் போல்
நீதிகேட்டு போராடினான்
நீதிமன்றத்திற்கு
வந்த கன்னியோ
வாழவிருப்பமில்லை அவனோடு
வாழ்வேன் இனி நான்
அன்னையோடு என்றாள்!
அத்தகைய முடிவு
அன்னை மேலுள்ள பாசமா
சாதி வெறிபிடித்த
நாய்களின் கோபாவேசமா?
அவனால் பிரித்தறியமுடியவில்லை

கரம் பிடித்தவள்
மனம் மாறுவாள்
மண வாழ்க்கை ஏறுவாள்
என நினைத்தவன்
எண்ணத்தில்
மண் விழுந்தது
மனம் துவண்டது
என்ன நினைத்தானோ
ஏது நினைத்தானோ
காலமொன்றே அறியும்
கன்னியின் பேச்சால்
காயம்பட்டவன்
தன்னையே மாய்த்துக் கொண்டான்
தன்னுயிரை நீத்துக் கொண்டான்
என ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன
சில கொலை என கூறுகின்றன
ஒரு காதல் மணம்தான்
இரு உயிர்களின் நீக்கத்திற்கு
காரணமென்று
யாரேனும் சொன்னால்
அவர்களை .....ஆல் அடிக்க வேண்டும்

இவைகள்
தற்கொலை அல்ல
சாதீய எண்ணங் கொண்ட
ஓநாய்கள்
செய்த கொலைகள் அன்றோ?
இத்தரங்கெட்ட நாய்களை
தண்டிப்பவர் யார்?
இச்சாதி வெறிபிடித்த நாய்களை
கொன்றழிப்பவர் யார்?
கேள்விகள் கிளை விட்டு முளைக்கின்றன
பதில் தருவார் யாரோ..?

மகள்தானே மணம் கொண்டாள்
மகிழ்ந்திருப்போம்
என கன்னியின்
தந்தையும் நினைக்கவில்லை
கணவன்தான் போய்விட்டார்
மகளேனும் வாழட்டும்
என அவளன்னையும்
நினைக்கவில்லை
கரம் பிடித்தவனோடு
வாழ்ந்து பின் அன்னையை
சமாதானம் செய்வோம்
என அவளும் நினைக்க வில்லை
எத்தனை துயர் வரினும்
துஞ்சாமல் கைப்பிடிப்போன்
என அவனும் நினைக்கவில்லை
போங்கடாங்க நீங்களும்
உங்க கல்யாணமும்..!

இப்படியே ஒவ்வொருவரும்
செய்து மாண்டால்
நம் நாட்டில்
சாதீயம் இருக்கும்
சமுதாயம் இருக்காது
சாதிவெறி இருக்கும்
சமத்துவம் இருக்காது
ஏற்றத்தாழ்வு இருக்கும்
ஒற்றுமை இருக்காது
போங்கடாங்க நீங்களும்
உங்க கேடுகெட்ட சமுதாயமும்..!

(கவிதை எழுதி கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. இத்தனை நாட்களாக எழுதத் தோன்ற இயலா அளவிற்கு மோசமான சம்பவங்கள் என் வாழ்வில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இன்று என்னை மட்டுமின்றி ஒட்டு மொத்த காதலர்களையே உலுக்கும் செய்தியாக இளவரசன் மரணம் அமைந்து விட்டது. நெஞ்சு பொறுக்கவில்லை... வார்த்தைகாளாக இங்கே கொட்டி விட்டேன். என்று மாறும் இந்த சமுதாயம்.

இளவரசா... பொறுத்திருந்திருக்கலாமே நீ... பொறுத்தவர்தானே பூமி ஆழ்வார்... ஆதலினால் காதல் செய்வீர் என்பதை, ஆதலினால் சாதல் செய்வீர் என்றாக்கி விட்டார்களே... உனது முடிவைக் கேட்டதிலிருந்து கண்ணீர் விம்முகிறது... 

சாதீய பலிக்கு உனது உயிரே கடைசியாக இருக்கட்டும்!

நிற்க மறுக்கும் கண்ணீருடன்

மோகனன்)




Tuesday, June 4, 2013

அன்பால் அணைக்கும் அகிலா..! - பிறந்தநாள் கவிதை


ஒரு மகவு போதுமென தந்தை யான்
   உன்னத முடிவெடுத்திருந்தேன் - உன் தாயோ
மற்றொரு மகவு எனக்கு வேண்டுமென
  சன்னதம் செய்து உனைப் பெற்றெடுத்தாள்
முதல் மகவின் துணைக்குத் துணையாக
  இணைக்கு இணையாக உனை ஈன்றெடுத்தாள்

மருந்தென உனை நினைத்து வாழ்வில்
   வேண்டாமென நினைத்திருந்தேன்
விருந்தென வந்து விழுந்தாய் - மடியில்
  விழுதெனப் பற்றி விட்டாய் அகிலா..!
குறுகுறு மழலைப் பார்வைகள் மறைந்து
  துறு துறு  பருவத்தை  எட்டி விட்டாய்

மரணத்தை அலற வைத்து இம்மண்ணில்
  மழலையென நீ மலர்ந்தாய் - பிறந்த பின்
காலனைக் கதற  வைத்து  இக்கலி
  யுகத்தில் கம்பீரமாய் கால் பதித்தாய்!
அன்று நடந்த நிகழ்வுகள் எல்லாம்

கதிர் கண்ட பனிபோல் மறைந்து போயின!

இன்றோடு நீ பிறந்து ஆண்டு ஐந்து ஆயிற்று
  உனைப் பிடித்த துன்பங்கள் காற்றோடு போயிற்று
அகிலத்தை அன்பால் அணைக்கும் அகிலா 
    இனி இன்பங்கள் உனை விட்டு அகலா..
வான்முகிலும் இனி உன் பிறப்பை பாடும்
  வரலாறும் தன் ஏட்டில் உன் புகழைச் சூடும்!



(எனது இளைய மகனின் ஐந்தாவது பிறந்தநாள் இன்று... அவருக்காக நான் எழுதிய கவிதை இது..! )




Tuesday, April 16, 2013

மின் வெட்டு! - ஜாலி கவிதை


இதோ வருகிறேன்
அதோ வருகிறேன்
என்று சொல்லி விட்டு
அடிக்கடி காணாமல் போகிறாயே
நீயென்ன
என் வருங்கால
சம்சாரமா..?
இல்லை
தமிழ்நாட்டின்
மின்சாரமா..?

@@@@@@@@@@@@@

நீ கண்வெட்டிப்
போகும்
போதெல்லாம்
எனக்கு
தமிழ்நாட்டின்
மின்வெட்டுதான்
நினைவிற்கு வருகிறது...

@@@@@@@@@@@@@

மின்சாரத் துண்டிப்பால்
அடிக்கடி
இயக்கமிழக்கும்
இயந்திரத்தைப் போல்
உன் கண்சாரத்
துண்டிப்பால்
நானிங்கு
இயக்கமிழந்து போகிறேன்..!

@@@@@@@@@@@@@

(கோடை வெயில் கொளுத்தி அடிக்க, தமிழகமே மின்வெட்டால் திமிலோகப்பட, நான் மட்டும் சும்மா இருப்பேனா... மின்வெட்டை இப்படியும் நையாண்டியாக சுட்டலாம் என்பதை இங்கே நாசூக்காக எழுதியிருக்கிறேன்...

ஹி...ஹி... சும்மா ஜாலிக்கு இந்த மின்வெட்டு கவிதை..!)




Saturday, April 13, 2013

விஜயமே வருக..! - தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கவிதை!




நனிமகள் நந்தனாண்டு நடை தளர்ந்தாள்
பனிமகள் தளிர்நடை வளர்ந்தாள் - பறக்கும்
சித்திரைத் தேரிலேறும் தமிழ் விசயாண்டே
முத்திரை பதிக்க வருக!

************(இஃது ஒரு வெண்பா முயற்சி)**************


ஆண்டாண்டு காலமாய்
அழுது புலம்பினாலும்
மாண்ட காலம் மீள்வதில்லை
ஆயினும்
எம் தமிழ்ப் புத்தாண்டுப்
பெண்ணோ
ஆண்டாண்டு காலமாய்
மீண்டு கொண்டிருக்கிறாள்
எனைப் போன்ற
தமிழ்ப் பித்தன்களை
மீட்டுக் கொண்டிருக்கிறாள்...

குழவியாய்
நடைபயின்ற
நந்தன ஆண்டு
இன்றோடு
விடை பெறுகிறது
கிழவியாய்..!
அவள் பெற்ற குழவி போல்
அடுத்து நடைபயில
வருகிறது
விஜய ஆண்டு...
வரவேண்டும் விஜயமே
வளம் பல வேண்டும்
தினமுமே..!

வருக வருக
விஜயமே வருக
தருக தருக
நலம் பலவே தருக
பருக பருக
தமிழ் அமுதே பருக
பெருக பெருக
தமிழ் புகழே பெருக
எழுக எழுக
தமிழர் வாழ்வே எழுக
வெல்க வெல்க
தாய்த் தமிழே வெல்க
வளர்க வளர்க
மனத நேயமே வளர்க
பொழிக பொழிக
மாதம் மும்மாரி பொழிக
வாழ்க வாழ்க
தமிழ்புத்தாண்டே வாழ்க..!

(எனது அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது முன்கூட்டிய இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
ஏற்றத்தாழ்விலா சமுதாயம் மலர வேண்டும்

என வேண்டும்
உங்கள்
மோகனன்)




Friday, April 12, 2013

உன் பிறப்பால்..! - தோழிக்கு பிறந்தநாள் கவிதை

ண்டத்தில் சுற்றித் திரியும்
      துண்டங்களில் அழகினும் பேரழகிய
வெண்ணிலவாய் உருவெடுத்து
      பெண்ணிலவாய் பிறந்தாய் இன்று
னிலம், நீர், காற்று, வெளியென
      உன் பிறப்பால் களிப்பெய்திய நாளின்று
ஸ்வரமே நீ பிறந்த இந்நாள் மட்டும்
      இன்றி என்னாளும் உன்னாளாகட்டும்!


(என் அலுவலக தோழிக்கு நேற்று பிறந்த நாள். நான் அலுவலகத்தில் சோர்ந்திருக்கும் போதெல்லாம், எனை அன்போடு விசாரிப்பவர். நேற்றும் நான் அப்படி இருக்கவே, அவருக்கு நான் ஒருவாழ்த்து கூட சொல்லவில்லை. மாலையில் அவரே எனை அணுகி, ஏன் இப்படி வருத்தமாக இருக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டுதானே இருப்பீர்கள். அப்படி இருப்பதுதான் எங்களுக்குப் பிடிக்கும்  என்று, என்னை ஆசுவாசப்படுத்தினார்... அதன் பிறகே அவருக்கு வாழ்த்து சொல்ல விரும்பி, இக் கவிதை  மூலம் வாழ்த்தை சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ந்து போனார். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். 

இக்கவிதைகளின் ஒவ்வொரு வரிகளிலும் தடித்திருக்கும் முதல் எழுத்தை மேலிருந்து கீழாக படித்துப் பார்த்தால் என் தோழியின் பெயர் படிக்கக் கிடைக்கும்.)




Monday, April 1, 2013

அன்பிற்கு இவன் அடிமை..! - அகர வரிசைக் கவிதை


மோகத்தின் முதற்பிள்ளை
மோகனின் மூன்றாம் பிள்ளை
அன்பினில் அன்றில் பறவை
ஆசையில் அன்னப் பறவை..!

ன்பிற்கு இவன் அடிமை
க்கத்தில் நிகழ்த்துவான் புதுமை
அனைத்தையும் அறிந்து கொள்ள
ஆசைப்படும் இவன் இளமை

வனொன்றும் செய்யாமலே
டற்ற தென்றல்கள் இவனைத் தீண்டும்
இவன் வாசம் பெற ஏங்கும்
ஈரிதழும் பெருமூச்செறிந்து தூங்கும்..!

ண்மையில் ஒன்றுமில்லாதவனெனினும்
க்கத்தை நிறைத்து வைப்பான்
உலகம் உய்ய உழைத்திருப்பான்
ஊடல் பல செய்து வைப்பான்

ளிமை வாழ்க்கை விரும்புமிவன்
ழை பெற்ற எளிய மகன்
என்னையும் நேசிக்கும்
ஏந்திழையே நான் செய்த பேறென்ன

யம் பட்டு நிற்கிறேன் - அன்பே என்
ஐயத்தை நீக்குவாய்... உன்னருகாமைக்கு
ம்புலனும் ஏங்குவதேன்
ஐயகோ என்று அலறுவதேன்...

ன்றாய் வாழ நினைக்கிறேன்
வியமே பதிலைச் சொல்...
ஒன்றிணைவது எப்போது? - நாம்
ஓடி விளையாடுவது எப்போது?

வை சொன்ன மொழி கேட்டால்
ஔடதமாய் இனிக்குதடி..
க்கறையே நான் இக்கரையில்
ஃதே அன்பே நானென்ன செய்ய...?

(என் கவிதை ஓர் தமிழ் விரும்பி. தமிழ் குறும்பி... அவளுக்கென அகர வரிசையில் எனை வைத்து அவளுக்காக வரைந்த கவிதை இது...)




Monday, March 25, 2013

மூச்சுவிடாமல் முத்தமிடுகிறாயே..?


வனத்தில் விரவும்
பூந்தென்றல் போலே
வானத்தில் விரவும்
வெண்கதிர்களால் எனை
விடாமல் முத்தமிடுகிறாயே
சற்று மூச்சு விட்டுத்தான்
முத்தமிடேன்
என்று சூரியனிடம்
கொஞ்சினாள் நிலா மதி

வெப்ப நிறை
மூச்சுக்காற்றையும்
வெளிச்ச நிறை
முத்தக்காற்றையும்
விட்டுவிட்டால்
உயிர் நீத்து விடுவேன் அன்பே...
எனை விடுத்து
நீ விலகினால்
இருளைச் சுமப்பாய் அன்பே
என்றான் சூரியன்..!

உன் முத்தமும் வேண்டும்
உன் மூச்சுக்காற்றும் வேண்டும்
மூச்சு முட்ட நீ கொடுக்கும்
முத்தத்தால்
நான் மூர்ச்சையானால் பரவாயில்லை
நீ மூர்ச்சையாகி
விடக்கூடாது அன்பே...
நீ மூர்ச்சையாகி விட்டால்
என் வாழ்வே மூர்ச்சையாகி விடும்
என்றாள் நிலாமதி..!

பூமியை நீ சுற்றிக் கொண்டிருந்தாலும்
உன் மையல் எல்லாம்
என்மேல் என்பதால்தானே
தையல் உன்மேல்
கண்ணாக இருக்கிறேன்
உன்றன் கண்ணாக இருக்கிறேன்
மூர்ச்சையானாலும்
பரவாயில்லை
உனை முத்தமிடாமல் இருக்க மாட்டேன்
என்றான் சூரியன்..!

(எத்தனை நாட்களுக்குதான் மானிடக் காதலைப்பற்றியே எழுதுவது... பிரபஞ்சத்தின் காதலர்களான சூரியனையும் நிலவையும் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது... அதன் விளைவே இக்கிறுக்கல்...)