ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, November 11, 2013

சிக்கல்..!


சுட்டெரிக்கும் சூரியனைக் கூட
நேருக்கு நேராய்
பார்த்து
விடுகிறேன்...
ஆனால் உன் சுட்டு விழியை
என்னால் பார்க்க முடிவதில்லையே
அது எப்படி?
உன் மொழி ஈர்ப்பு விசையில் கூட
வீழாமல் இருக்கிறேன்
உன் விழி ஈர்ப்பு விசையில்
வீழ்ந்து போகிறேனே
அது எப்படி..?
கம்பீரமாய் எப்போதும்
கண் பார்த்து பேசும் எனை
கண்கட்டி வித்தைபோல்
மண் பார்த்து பேச வைத்தாயே
அது எப்படி?
இப்படி என்னுடைய
அடையாளங்களெல்லாம்
உன்னுடைய ஒற்றைப் பார்வையில்
தடுமாறிப் போகிறதே
அது எப்படி 
என்ற
குழப்பச்சிக்கலில்
நான்
குறும்புச் சிரிப்பில் நீ..! 
-------------------------------------------------

(அன்பர் வே. நடனசபாபதி கேட்டதற்கு இணங்க 'சிக்கல்' எனும் தலைப்பில் இக்கவிதை..  அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கருப்பொருள் 'காதல்'. வேலைப்பளு காரணமாக கவிதை எழுதவதற்கு தாமதம் ஆகிவிட்டது... என்று பொய்யுரைக்க விரும்பவில்லை... இத்தலைப்பில் கவிதை தோணாமல் ஒருவாரம் தவித்துப் போனேன். பின்னர் அழகான கவிதையைப் பார்த்ததும் கிறுக்கி விட்டேன்...)



Blogger வே.நடனசபாபதி said...
உண்டியல் கருத்தும் கவிதையும் அருமை. நீங்கள் கேட்டதால் நான் தருகிறேன் தலைப்பு. ‘சிக்கல்’ என்பதே அது. காத்திருக்கிறேன் கவிதையைப் படிக்க!
October 30, 2013 at 3:35 PM
 Delete




8 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை நண்பா.

மோகனன் said...

நன்றி என் நட்பே...

Unknown said...

சிக்கல் என்ற தலைப்பை எடுத்தளித்தவருக்கும் குழப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டவருக்கும் பாராட்டு.

எந்நிலையிலும் வார்த்தைகள் உங்களுக்கு வசமாகி வருகின்றன. வாழ்த்துகள்

ஆயினும் ஒரு வேண்டுகோள்
ஏறி நின்று எங்கும் பாராடா இப்புவி மக்களை
பாராடா உன்னுடன் பிறந்த . . .
என அறைகூவல் விடுத்த பாரதிதாசனை நினையுங்கள்

உங்கள் எழுத்து வளத்தை அங்கும் கொண்டு செலுத்துங்கள்
உடலைக் கெடுக்கும் துரித உணவுகள், இல்லாததைச் சொல்லும் விளம்பரங்கள், மாறிவரும் மண்வளம், மக்கிவரும் மானுடம், தொழில்நுட்பத்தில் தொலைந்து போன நாம். . . என இன்னும் என்னென்னவோ
உங்கள் எழுதுகோலில் இருந்து வெளிவரக் காத்திருக்கின்றன.

கொஞ்சம் வெளிவாருங்கள் நண்பரே
சமூகத்தைச் சிந்தியுங்கள்

இது எனது சிறிய பரிந்துரை மட்டுமே.
ஏற்றுக் கொள்வது உங்களுக்கேயானது

ஆனால்
உங்களால் முடியும்


நம்பிக்கையுடன். . . .



மோகனன் said...

அன்பிற்கு நன்றி...

இந்த தளத்தில் அதிகம் காதலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்...

காதல் இல்லா உலகம் இல்லை என்பதால்...

இருப்பினும்... தங்களின் ஆலோசனைப்படி நிச்சயம் அவற்றையும் எழுதுகிறேன்...

விரைவில் அதை எதிர்பார்க்கலாம்...

நீங்களே ஒரு கருப்பொருளையும், தலைப்பையும்தான் கொடுங்களேன்...

Anonymous said...

ரசனை மிக்க கவிதை.
அட நம் வலைப்பூ போலவே பெயர் உள்ளதே ...
ஆச்சர்யம்.....

மோகனன் said...

அன்பு ஸ்வராணிக்கு...

தங்களின் ரசனைக்கும், இணைப்பிற்கும் இனிய நன்றிகள்...

நல்ல மனங்கள் எப்போதும் ஒன்றாகத்தான் சிந்திக்கும்... வருகைக்கு நன்றி

வே.நடனசபாபதி said...

காதலியை பார்ப்பதில் கூட சிக்கல் இருக்கும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. நீங்கள் ‘அனுபவித்து’ எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பள்ளியில் படிக்கும்போது திடீர் பேச்சுப்போட்டி என்று ஒன்று இருக்கும். பேச வருவோருக்கு அப்போதுதான் தலைப்பு தருவார்கள். திடீரென தயாரிப்பு ஏதும் இல்லாமல் பேசவேண்டும். அது மிகவும் கடினமான ஒன்று. அது போல வேறொருவர் தலைப்புக் கொடுத்து கவிதை எழுதுவதும் அத்தனை சுலபமல்ல. ஆனால் நீங்கள் வெகு சுலபமாக கவிதை படைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

மோகனன் said...

அன்பு நடனசபாபதி அவர்களுக்கு...

பள்ளியில் எனக்கு இதுபோன்ற திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்புகள் கிட்டியதில்லை...

தாங்கள் சொல்லும் அளவுக்கு திறன் படைத்தவனும் இல்லை...

எளியோரில் எளியோன் நான்...

தங்களன்பிற்கு நன்றி... (காதல்னாலே சிக்கல்தான் தலைவரே... உண்மையில் அனுபவித்து எழுதியதுதான் இது...
நான் எழுதும் கவிதைகள் அனைத்துமே அனுபவித்துதான் எழுதுகிறேன்...)