ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, August 10, 2017

சங்கிலிப் பறிப்பு

’ஹெல்மெட் அணிந்த
கொள்ளையர்கள்
சாலையில் சென்ற
பெண்களிடம்
சங்கிலிப் பறிப்பு’ செய்தியை
பெட்டிக்கடையில்

பல்லிளித்துக் கொண்டிருந்த
வால் போஸ்டரில்
பார்த்துவிட்டு
பைக்கில்
வந்துகொண்டிருக்கையில்
போக்குவரத்துக்
காவல் துறை
வழிமறித்துக் கேட்டது!
“நீங்கள் ஏன்
ஹெல்மெட் போடவில்லை?”




Saturday, July 29, 2017

பிறருக்காக வாழ்! - செல்பி கவிதை


முகநூலில்
முகமறியா நண்பர்களுக்கு
முகம் காட்ட வேண்டும்
என்பதற்காகவும்...
வாட்ஸ் அப்பில்
மணிக்கொரு முறை
புரொபைலை
மாற்ற வேண்டும்
என்பதற்காகவும்
தினந்தோறும்
உயிர்ப்பிக்கப்படுகின்றன
திடீர் செல்பிக்கள்!
வாழ்க இதிலேனும்
'பிறருக்காக வாழ்'கின்ற
தத்துவம்!




Monday, August 8, 2016

குப்பை வண்டி!

ஊரைச் சுத்தப்படுத்துகிறேன்
எனும் போர்வையில்
தெருக்களை சுத்தப்படுத்தும்
மாநகராட்சி குப்பை வண்டி
குப்பைத்தொட்டியில் இருந்து
குப்பைககளை மொத்தமாய்
அள்ளிக் கொண்டு
தெரு முழுக்க இறைத்துக் கொண்டு
போவது போல
இன்றைய அரசியல் கட்சிகள்
தமிழ்நாட்டை
குப்பையாக்கிக் கொண்டிருக்கின்றன!

(இன்று காலை அலுவலகம் வரும் சாலையில் சென்னை மாநாகராட்சியின் குப்பை வண்டி செய்த வேலையை சாலையில் பார்த்த போது... தோன்றியது... )




Saturday, August 6, 2016

பச்சை உயிரி!


உலக உயிர்கள்
எல்லாம்
சுவாசிக்க வேண்டும்
என்பதற்காக
தன் உடலெங்கும்
சுவாசப் பையினை
சுமந்து கொண்டிருக்கும்
பச்சை உயிரி
'மரம்..!'

(இன்றும், வழக்கம் போல சிலம்பாட்டப் பயிற்சியில் இருக்கும் போது, பிரசாந்த் எனும் 16 வயது பையன் என்னிடம்  கவிதை சொல்லக் கேட்ட தலைப்பு 'மரம்'

இரண்டு நிமிட யோசிப்பில், சிலம்பத்தை சுழற்றியபடியே அவனிடம் சொன்ன கவிதை இது...)




Friday, August 5, 2016

ரசாயனக் காதலால்..!


இரும்பிற்கும்
ஈரப்பதக் காற்றிற்கும்
ஏற்பட்ட
ரசாயனக் காதலால்
பிறந்த குழந்தை
'துரு'

**************************

(இன்று காலை சிலம்பப் பயிற்சியின் போது, என்னுடன் பயிற்சி செய்யும் 16 வயது பையன் ஒருவன்... அண்ணா நீங்க கவிதை எல்லாம் சொல்லுவீங்களாமே... எனக்கு ஒரு கவிதை சொல்லுங்கண்ணா என்று கேட்க... எதைப்பத்தி கவிதை சொல்லணும் என்று கேட்டேன். பக்கத்தில் இருந்த இரும்புப் பெட்டியில் துரு பிடித்திருந்ததைப் பார்த்ததும்... 'துரு' பத்தி கவிதை சொல்லுங்கண்ணா என்றான்.

அடுத்த ஒரு நிமிடத்தில் கவிதை சொன்னேன்... அண்ணா.. சூப்பருங்கண்ணா... என் ஸ்கூல்ல கவிதைப் போட்டின்னா உங்ககிட்டதான் வருவேன்.. எழுதிக் கொடுங்கண்ணா என்றான். 


அவனிடம் சொன்னது அப்படியே மேலே....)




Wednesday, July 27, 2016

மீண்டும் எழுந்து'வா..!’ - அப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை


இந்தியாவின்
கடைக்கோடியில்
பிறந்திருந்தாலும் எங்களை
தலைக்கோடியிலிருந்து
ஆண்ட எங்களின்
எளிமைத் தலை'வா…'
குறளுக்கு
இலக்கணமாய்
இருந்து
குமரித்தமிழ்
பரப்பிய
உண்மைத் தலை'வா…'
அணுவின் அசைவுகளை
நுணுக்கமாய் ஆராயும்
அமெரிக்காவின் கண்ணில்
மண்ணைத் தூவி
பொக்ரானில் அணுவைப் பிளந்த
விஞ்ஞானத் தலை'வா…'
மாணவர்கள் இதயத்தில்
சிம்மாசனமிட்ட
கறுப்புத் தமிழா…
உனை இந்நாளில்
இழந்து தவிக்கின்றோம்
நீ மீண்டும் எழுந்து'வா…'
தமிழ் உலகமே
அழுகின்றதே தலை'வா…'
மீண்டும்'வா…'
கண்ணீரில் கரைகின்றோம்
அன்புக் கரம் கொண்டு
துடைத்திட எழுந்து'வா…'
தலை…. வா…… தலை'வா..!'
****************************





Monday, June 27, 2016

பத்துமாசம் நான் சுமந்து..! - தாலாட்டு பாடல்




ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ...
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ...

பத்துமாசம் நான் சுமந்து
பெண்ணிலவ பெத்தெடுத்தேன்!
பத்தியந்தான் பல இருந்து
பால் நிலவ பெத்தெடுத்தேன்!

குட்டி நிலா தங்கையாக
சுட்டியாகப் பிறந்த பெண்ணே
குலம் விளங்க வளர வேணும்
கண் மூடி தூங்கு கண்ணே
நல்லா நீயும் படிக்க வேணும்
விழி மூடி தூங்கு கண்ணே
நாடு போற்ற வாழ வேணும்
நன்றாக தூங்கு கண்ணே
நன்றாக தூங்கு கண்ணே!

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)

சிப்பிக்குள்ள முத்து போல
என் வடிவில் இருக்கும் முத்தே
சிங்கார வித்து போல
எம்மடியில் கிடக்கும் முத்தே
மயக்கும் நிலவு போல
அக்காகிட்ட சிரிச்ச முத்தே
சின்ன அரும்பு போல
அப்பாகிட்ட சிரிச்ச முத்தே
யாரடிச்சி நீ அழற
அம்மா ஒனக்கு நானிருக்கேன்
அழாம தூங்க வேணும்
அம்மா ஒனக்கு தொணையிருக்கேன்
என் எண்ணம் குளிரும்படி
அன்னம் போல தூங்கு கண்ணே
நீ அன்னம் போல தூங்கு கண்ணே

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)

வெள்ளி போல வந்தவளே
வெம்பி நீயும் ஏன் அழற
நீ தூங்க வேணுமுன்னு
தேக்குத் தொட்டில் வாங்கி வந்தேன்
மான் போல நடக்கணும்னு
மணிகொலுசு வாங்கித் வந்தேன்
நீ பசியாற வேணுமுன்னு
பால் வெள்ளித் தட்டு வாங்கித் தந்தேன்
எல்லாமே உனக்கிருக்கு
எதுக்கம்மா நீ அழற
அம்மா உனக்கு தொணையிருக்கேன்
அழாம தூங்கு கண்ணே
அழாம தூங்கு கண்ணே

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)

பனி நிலவு ஆனவளே
பதறி நீயும் ஏன் அழற
அண்ணன் உன்ன கொஞ்சிடுவான்
அமுதே நீ கண்ணுறங்கு
அக்கா உன்ன கொஞ்சிடுவா
அழகே நீ கண்ணுறங்கு
பாட்டி உன்ன கொஞ்சிடுவா
பனியே நீ கண்ணுறங்கு
தாத்தா உன்ன கொஞ்சிடுவார்
தாயே நீ கண்ணுறங்கு
அப்பா உன்ன கொஞ்சிடுவார்
அறிவே நீ கண்ணுறங்கு
அம்மா உன்ன கொஞ்சிடுவேன்
அம்புலியே கண்ணுறங்கு
அம்புலியே கண்ணுறங்கு
என் அம்புலியே கண்ணுறங்கு

ஆராரோ
ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ (பத்து மாசம்)

(
எனக்கும் தாலாட்டு பாடல் ஒன்றை எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை... இன்றுதான் அது நிறைவேறியது. மகள்களைப் பெற்ற அத்தனை அன்னையருக்கும் இந்த தாலாட்டு சமர்ப்பணம்...)




Friday, April 29, 2016

ஆறாய்ப் பெருகி..!


கனவுகள் வழியே
என் நினைவுகளைத் 
திருடிச் செல்லும்
தேவதையே..!

குரலின் வழியே
என்னுயிரினை
உரசிச் செல்லும்
பூங்குயிலே..!

ஓரப்பார்வையின் வழியே
என்னுலகினை
வசியம் செய்யும்
வான்மதியே..!

உன் அன்பின் வழியே
உன்னால் இங்கு
பனியாய் உருகி வழிகின்றேன்..!

ஆறாய் பெருகி ஓடுகின்றேன்..!

நீ அணையாக இருந்தென்னை
அணைப்பாயா?
நீ துணையாக இருந்தென்னை 
இணைப்பாயா?

(தமிழரின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான... சிலம்பாட்டத்தை கற்றுக்கொண்டு வருகிறேன். நான் ஆடிய சிலம்பாட்டத்தை பார்க்கறீங்களா...: மோகனனின் சிலம்பாட்டம்)




Tuesday, March 22, 2016

நீரில் மிதக்கும் பூமிப்பந்து - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை!



ஓர் வகையில்
பார்த்தால்

இவ்வுலகும்
மனிதனும்  ஒன்றே!
அறிந்து சொல்வேன் இன்றே!
அது எதுவென்று
ஆராய்ந்து பார்ப்பின்
நீர் வகையில்
இரண்டும் ஒன்றே!
அறிந்திடுவீர் நீர் இதை நன்றே!

உலகில்
எழுபது சதவீதமும்
உடலில்
எழுபது சதவீதமும்
நிறைந்திருப்பது
உயிர் நீரே!
நம் உடலில் நீரும்
வற்றிவிட்டால்
உயிரும் காற்றாய் பறந்திடுமே
கடலில் நீரும் வற்றிவிட்டால்
உலக உயிரினங்ள்
சாம்பலாகிப் பறந்திடுமே!

யானை, புலி, சிங்கமெல்லாம்
தாகம் தணிக்க மட்டுமே
நீர் பருகும்
மனிதனெனும் மிருகம் மட்டுமே
தன் தேவைகள்
அனைத்திற்கும் நீர் உறிஞ்சும்!

தாவரம் வாழ
நீர் வேண்டும்
விலங்குகள் வாழ
நீர் வேண்டும்
உயிரினம் வாழ
நீர் வேண்டும்!

உணவைப் படைக்க
நீர் வேண்டும்
உயிரைப் படைக்க
நீர் வேண்டும்
உயிரைச் சுமக்க
நீர் வேண்டும்!


உணவுச் சங்கிலி உயிர்ப்போடிருக்க

உலகில் மறையா நீர் வேண்டும்
நீ, நானின்றி உலகிருக்கும்
நீரின்றி உலகிருக்காது
நம்மைக் காக்க
நீர் இருக்க…
நீரைக் காக்க யார் வருவார்?
நம்மை நாமே
காப்பதுபோல்
நீரை நாமும் காத்திடுவோம்!


நீரில் மிதக்கும் பூமிப்பந்தினை
வெப்பக்காடாய் மாற்றாமல்
பசுமைக்காடாய் மாற்றிடுவோம்!
மரங்களை புவியில் வளர்த்து
மண்ணில் நீரை சேமித்திடுவோம்
நீரை மாசு செய்யாமல்
நிதமும் சேகரம் செய்திடுவோம்!
அடுத்து வரும் தலைமுறைகளுக்கு
கானல் நீரைத் தாராமல்
நன்னீரையே பரிசளிப்போம்!


(இன்று உலக தண்ணீர் தினம்)

(நான் கௌரவ விருந்தினராக கலந்த கொண்ட நிகழ்ச்சி குறித்த தொகுப்பு இங்கே..: 'ஆசிரியர் வைபவம்' நிகழ்ச்சியில் அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!)




Monday, March 21, 2016

ஏனிப்படி..?


இளமையில்...
வறுமையில்...
அறியாமையில்...
இயலாமையில்...
"ஏனிப்படி" இருக்கிறோம்?
என்று எண்ணுகின்ற
விளிம்புநிலை மாணவர்களின்
'ஏணிப்படி'யே
அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!

(இன்று உலக கவிதை தினம்... இத்தகைய சிறப்பான தினத்தில்... எனை வளர்த்த, எமைப்போன்றவர்களை வளர்த்துக்கொண்டிருக்கும் அரசுப்பள்ளி ஆசிரிய சமூகத்திற்கு இக்கவிதை சமர்ப்பணம்.

நேற்றைய தினம் (20.03.2016) திருப்பத்தூரில் நடைபெற்ற 'ஆசிரியர் வைபவம்' எனும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். அந்நிகழ்ச்சியின் முடிவில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னிடம் ஆட்டோகிராப் கேட்க, அப்போது எழுதிக் கொடுத்த கவிதை இது... நிகழ்வின் அழைப்பிதழ் இங்கே... http://moganan.blogspot.com/2016/03/blog-post_18.html)




Tuesday, March 8, 2016

பெண்ணினமே நீ வாழி! - மகளிர் தின சிறப்புக் கவிதை!


இந்த உலகத்திற்கே
உயிர்களை
உருவாக்கிக் தரும்
உன்னதம்!- தாய்மை!

உலகத்தையே
அழகாக்கும்
திறன் கொண்ட
ரசவாதம்! - மலர்கள்!

தன்னுயிரை
பணயம் வைத்து
என்னுயிரை உருவாக்கிய
புனிதம்! - அம்மா!

அடம்பிடிக்கும்
என்னிடம்
அன்பைப் பொழியும்
அமுதம்! - அக்கா!

காட்டுத்தனமாய்
சுற்றித்திரியும்
இக்களிறை அடக்கும்
அங்குசம்! - காதலி!

என்னுயிரை
உள்வாங்கி
எனையே உயிர்ப்பிக்கும்
உத்தமம்! - மனைவி!

என்னுலகை
பொன்னுலகமாக்கி
எனக்கன்னையாய் மாறும்
வசந்தம் - மகள்!

எனக்கு மட்டுமல்ல
உலகிலுள்ள
எல்லா ஆண்களுக்கும்
இவையே நியதி!

எங்களைப் படைத்த
உன்னத மலர்களே
இன்றுங்களைப் போற்றும்
பொன்னான திகதி!

நீரின்றி உயிரில்லை
நீயின்றி அணுவில்லை
அணுவின்றி எவையுமில்லை
பெண்ணினமே நீ வாழி!


(உலகிலுள்ள அத்தனை மகளிருக்கும் என் இதயம் நிறைந்த இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!)

பொது அறிவு:உலகின் தற்போதைய பெண் தலைவர்கள்! - மகளிர் தின சிறப்புப் பதிவு!




Friday, January 29, 2016

முடியாது..!



"என்னால் முடியாது...
எதுவுமே முடியாது...
தொலைதூரத்தில்
இருக்கும் உன்னிடம்
அலைபேசியில்
ஆர்ப்பரிக்கும் அலையைப்போல்
பேசமுடிகின்ற என்னால்…
நேரில் சந்தித்தால்
ஒரு நொடிகூட
தைரியமாய் பேச முடியாது..!"
என அடிக்கடி சொல்லிக் ‘கொல்கிறாய்’
'வாய் பேச முடியாவிட்டாலென்ன?
உன்னிரு கண்கள் போதுமே
பேசுவதற்கு…' - என்றேன்
"அதுவும் முடியாது…
வெட்கத்தால்
கண்களை தாழ்த்திக் கொள்வேன்…
மொத்தத்தில்
உன்னை நேரில் பார்த்தால்
என்னால் எதுவுமே முடியாது…"
என்று சொன்னவளே…
குங்குமப்பூவைப் போல்
வெட்கப்பட மட்டும் உன்னால்
எப்படி முடிந்ததாம்..!


('முடியாது' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுத முடியுமா என்று என்னிடம் சவால் விட்டதற்காக எழுதப்பட்ட காதல் கவிதை இது... அட நீங்களும் கூட சவலான தலைப்பைத் தரலாம். கருப்பொருளும் உங்கள் விருப்பம் போல... 

மயிலிறகோடு நான் தயார்... நீங்கள்..? )




Thursday, January 28, 2016

உம்ம்ம்…!



என் தமிழ் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் பேச்சு பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் மொழி நடை பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் குறும்புகள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் சீண்டல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் கிறுக்கல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் கொஞ்சல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என்னை பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
இப்படி எல்லாவற்றிற்கும்
“உம்ம்ம்” சொன்ன கள்ளியே
என் காதலுக்கு மட்டும்
கள்ளத்தனமாய்
“ஊஹும்…” சொல்வதேன்..!