ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label Social poems. Show all posts
Showing posts with label Social poems. Show all posts

Wednesday, March 21, 2018

எங்கும் இல்லை! - உலக கவிதை தின சிறப்புக் கவிதை!


உலகில் அன்னையைப் போலொரு
அணைக்கும் கவிதை எங்கும் இல்லை!
கலியில் தந்தையைப் போலொரு
வணங்கும் கவிதை எங்கும் இல்லை!

அழுகையில் அக்காவினைப் போலொரு
துடைக்கும் கவிதை எங்கும் இல்லை!
விழுகையில் அண்ணனைப் போலொரு
தாங்கும் கவிதை எங்கும் இல்லை!

அறிவினில் ஆசிரியனைப் போலொரு
வாள்தரும் கவிதை எங்கும் இல்லை!
உறவினில் நண்பனைப் போலொரு
தோள்தரும் கவிதை எங்கும் இல்லை!

அழகில் காதலியைப் போலொரு
மயக்கும் கவிதை எங்கும் இல்லை!
பொழுதில் மனைவியைப் போலொரு
முயக்கும் கவிதை எங்கும் இல்லை!

கொஞ்சும் மழலையைப் போலொரு
சுவைதரு கவிதை எங்கும் இல்லை!
கொஞ்சும் தமிழினைப் போலொரு
மொழிதரு கவிதை எங்கும் இல்லை!

விஞ்சும் உறவுகளைப் போலொரு
வில்லங்கக் கவிதை எங்கும் இல்லை!
அஞ்சும் மரணத்தைப் போலொரு
ஆழ்துயில் கவிதை எங்கும் இல்லை!

(உலக கவிதைகள் தினத்திற்காக இன்று காலை அவசர அவரசமாகக் கிறுக்கியது)




Thursday, August 10, 2017

சங்கிலிப் பறிப்பு

’ஹெல்மெட் அணிந்த
கொள்ளையர்கள்
சாலையில் சென்ற
பெண்களிடம்
சங்கிலிப் பறிப்பு’ செய்தியை
பெட்டிக்கடையில்

பல்லிளித்துக் கொண்டிருந்த
வால் போஸ்டரில்
பார்த்துவிட்டு
பைக்கில்
வந்துகொண்டிருக்கையில்
போக்குவரத்துக்
காவல் துறை
வழிமறித்துக் கேட்டது!
“நீங்கள் ஏன்
ஹெல்மெட் போடவில்லை?”




Saturday, July 29, 2017

பிறருக்காக வாழ்! - செல்பி கவிதை


முகநூலில்
முகமறியா நண்பர்களுக்கு
முகம் காட்ட வேண்டும்
என்பதற்காகவும்...
வாட்ஸ் அப்பில்
மணிக்கொரு முறை
புரொபைலை
மாற்ற வேண்டும்
என்பதற்காகவும்
தினந்தோறும்
உயிர்ப்பிக்கப்படுகின்றன
திடீர் செல்பிக்கள்!
வாழ்க இதிலேனும்
'பிறருக்காக வாழ்'கின்ற
தத்துவம்!




Tuesday, November 29, 2016

உங்களைத் தின்பதற்கு..?


மழை பொய்த்ததால்
எங்கு பார்த்தாலும்
பெரும் வறட்சி!
நகரத்தில் மூச்சுவிடாமல்
இயங்கிக் கொண்டிருக்கின்றன
குளிரூட்டிகள்!
கிராமத்தில் நீரின்றி
வாய்பிளந்து கிடக்கிறது
நெடிய வயல்வெளி!
கடும் பயணத்தில்
கண் சிமிட்டி மறைகிறது
கானல் நீர்!
வெறிச்சோடிக் கிடக்கின்றன
வெள்ளாமை செய்த
பெருவயல்கள்!
பயிர்கள் தலை கருக
விவசாயிகள் தற்கொலைகளால்
விவசாயம் தூக்கிலேறுகிறது!
பண முதலைகளின்
வராக்கடன்களை
வாஞ்சையாய் நீக்கிய வங்கிகள்
பஞ்சத்திற்கு கடன்வாங்கி
நிலம் உழுதவனை
பழி தீர்த்துக் கொள்கின்றன!

சுற்றுச் சூழலை சீரழிக்கும்
தொழிற்சாலைகளுக்கு
ரத்தினக் கம்பளம் விரிக்கும் ஓநாய்களே!
ரியல் எஸ்டேட் முதலைகளின்
பின்னால் வாலாட்டித்
திரியும் வங்கிகளே..!
விவசாயத்தை மறந்து
தொழிற் புரட்சியில் வீழும்
கனவான்களே..?
சீனாவின் பிளாஸ்டிக் அரிசியை
நீங்கள் தின்னும் காலம்
வெகு விரைவில் இல்லை!
கறுப்பு பணத்தை மீட்கும் அக்கறையை
கண்ணீல் நீரோடும்
கழுத்தில் சுருக்குக் கயிறோடு இருக்கும்
விவசாயிகள் மீதும் காட்டுங்கள்!
எதிர்காலத்தில்
நீங்கள் தின்பதற்கு
அரிசி இருக்கிறதோ இல்லையோ
உங்களைத் தின்பதற்கு
இந்த மண் கூட இருக்காது
சிமெண்ட் தரைகளாகத்தான் இருக்கும்!




Monday, August 8, 2016

குப்பை வண்டி!

ஊரைச் சுத்தப்படுத்துகிறேன்
எனும் போர்வையில்
தெருக்களை சுத்தப்படுத்தும்
மாநகராட்சி குப்பை வண்டி
குப்பைத்தொட்டியில் இருந்து
குப்பைககளை மொத்தமாய்
அள்ளிக் கொண்டு
தெரு முழுக்க இறைத்துக் கொண்டு
போவது போல
இன்றைய அரசியல் கட்சிகள்
தமிழ்நாட்டை
குப்பையாக்கிக் கொண்டிருக்கின்றன!

(இன்று காலை அலுவலகம் வரும் சாலையில் சென்னை மாநாகராட்சியின் குப்பை வண்டி செய்த வேலையை சாலையில் பார்த்த போது... தோன்றியது... )




Tuesday, March 22, 2016

நீரில் மிதக்கும் பூமிப்பந்து - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை!



ஓர் வகையில்
பார்த்தால்

இவ்வுலகும்
மனிதனும்  ஒன்றே!
அறிந்து சொல்வேன் இன்றே!
அது எதுவென்று
ஆராய்ந்து பார்ப்பின்
நீர் வகையில்
இரண்டும் ஒன்றே!
அறிந்திடுவீர் நீர் இதை நன்றே!

உலகில்
எழுபது சதவீதமும்
உடலில்
எழுபது சதவீதமும்
நிறைந்திருப்பது
உயிர் நீரே!
நம் உடலில் நீரும்
வற்றிவிட்டால்
உயிரும் காற்றாய் பறந்திடுமே
கடலில் நீரும் வற்றிவிட்டால்
உலக உயிரினங்ள்
சாம்பலாகிப் பறந்திடுமே!

யானை, புலி, சிங்கமெல்லாம்
தாகம் தணிக்க மட்டுமே
நீர் பருகும்
மனிதனெனும் மிருகம் மட்டுமே
தன் தேவைகள்
அனைத்திற்கும் நீர் உறிஞ்சும்!

தாவரம் வாழ
நீர் வேண்டும்
விலங்குகள் வாழ
நீர் வேண்டும்
உயிரினம் வாழ
நீர் வேண்டும்!

உணவைப் படைக்க
நீர் வேண்டும்
உயிரைப் படைக்க
நீர் வேண்டும்
உயிரைச் சுமக்க
நீர் வேண்டும்!


உணவுச் சங்கிலி உயிர்ப்போடிருக்க

உலகில் மறையா நீர் வேண்டும்
நீ, நானின்றி உலகிருக்கும்
நீரின்றி உலகிருக்காது
நம்மைக் காக்க
நீர் இருக்க…
நீரைக் காக்க யார் வருவார்?
நம்மை நாமே
காப்பதுபோல்
நீரை நாமும் காத்திடுவோம்!


நீரில் மிதக்கும் பூமிப்பந்தினை
வெப்பக்காடாய் மாற்றாமல்
பசுமைக்காடாய் மாற்றிடுவோம்!
மரங்களை புவியில் வளர்த்து
மண்ணில் நீரை சேமித்திடுவோம்
நீரை மாசு செய்யாமல்
நிதமும் சேகரம் செய்திடுவோம்!
அடுத்து வரும் தலைமுறைகளுக்கு
கானல் நீரைத் தாராமல்
நன்னீரையே பரிசளிப்போம்!


(இன்று உலக தண்ணீர் தினம்)

(நான் கௌரவ விருந்தினராக கலந்த கொண்ட நிகழ்ச்சி குறித்த தொகுப்பு இங்கே..: 'ஆசிரியர் வைபவம்' நிகழ்ச்சியில் அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!)




Wednesday, January 13, 2016

மூன்றாம் பிறைகள்..!


பௌர்ணமி நிலவால்
மூன்றாம் பிறைகள்
அனைத்தும்
மின்னும் நட்சத்திரங்களாகும்
விந்தைதனை
இப்பூவுலகில் காண்கிறேன்! -
உன்றன் வகுப்பறையில்..!




Wednesday, January 6, 2016

எது ஊடக அறம்?



வீடு, மனை விற்பனைக்கு
என்று முதல் பக்கத்தில்
வண்ணமயமான
விளம்பரத்தை வெளியிட்டு விட்டு
ஏரி, குளங்கள் ஆக்ரமித்து
வீடுகள் கட்டப்பட்டன
என்ற செய்தியை
கடைகோடி மூலையில்
வெளியிட்டு
தங்கள் ஊடக அறத்தை
நிரூபித்துக் கொள்கின்றன
பத்திரிகைகள்...

**************

நீர் நிலையை
அழித்தெடுத்து
ஏரிக்குள் வீடு கட்டி
விவசாயிகளின்
வயிற்றில் அடித்தான்
ஒருவன்...
பேராழியாய்ப்
பெருக்கெடுத்து
அவன் வயிற்றில்
அடித்தது பெருமழை...


***************




Wednesday, December 30, 2015

அழுதது மரம்..!


புவி தழைக்க
மழை வேண்டி
மரம் வளர்த்தது
ஒரு கூட்டம்...
மகிழ்ந்தது மரம்..!


மழை வேண்டி
யாகம் நடத்த
மரத்தை வெட்டியது
ஒரு கூட்டம்...
அழுதது மரம்..!

மரம் போல்
வளர்ந்திருக்கும்
மனிதர்களே...
இதில் நீங்கள்
எந்தக் கூட்டம்?




Monday, December 21, 2015

கடவுளைத் தேடும் மனிதர்களே...

மார்க்கத்தில்
கடவுளைத் தேடும்
மனிதர்களே...
மழையில் கரைந்த
மனிதங்களைத்
தேடுங்கள்...
மதங்களைக் கடந்த
மகத்தான
கடவுளாவீர்கள்..!

(மழை வெள்ளத்தில் பல்லுயிர்களைக் காத்த மாவீரர்களுக்கும், நிவாரணப் பணிகளில் களமாடிக்கொண்டிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்...)




Tuesday, November 24, 2015

வெள்ளத்தால் வீழ்ந்து சாகிறோம்


ஒற்றையாளாய்
ஊரின் எல்லையில்
கம்பீரமாய்  நின்று
ஊரைக்காக்கும்
எல்லைச்சாமி..!

ஊருலகம்
நீர் நிறைவாய் வாழ
ஒற்றைக் காலில்
தவம் கிடக்கும்
முனிவன்..!

கரும்பாசிகள்
கயல்கள்
கரு நண்டுகள்
என நீராதாரம் காக்கும்
கடவுள்..!

ஊருணி நிறைய
உழைக்கும்
விவசாயிகள் மகிழ
உயிர் நீர் காக்கும்
உத்தமன்!

ஆபத்து காலங்களில்
இரும்பென நின்று
இடர்தனை
நீக்கும்
பெரும் கரும்பன்..!

காவிரியே ஆனாலும்
கல்லணையே ஆனாலும்
கரும் வைரமாய்
தாங்கி நிற்கும்
கம்பீரன்

காகம், குருவிகளுக்கு
மட்டுமின்றி
மானிடத்திற்கும்
நன்மை பயக்கும்
அபயன்..!

இப்படி
எத்தனை வகையில்
எடுத்துச் சொல்லினும்
உன் சிறப்புகளை
வரிகளில் அடக்கமுடியவில்லை..!

கரைகளை கவ்விப்
பிடித்த உன் கருங்கரங்களை
கருணையின்றி
வெட்டி வீழ்த்தினோம்
கண்ட துண்டமாக்கினோம்

ஆக்கிரமிப்புகளால்
உனை அடியோடு வீழ்த்தினோம்…
இன்று வெள்ளத்தால்
வீழ்ந்து சாகிறோம்
பனை மரமே!





Wednesday, November 18, 2015

'தண்ணி'யும் அரசும்..!



அன்று –
ஊரெல்லாம்
‘தண்ணி’ என்று
‘குடி’மக்களிடம் சொன்னது அரசு…
‘குடி’ மக்கள் அதை
கண்டுகொண்டனர்…
கொண்டாடியது அரசு..!

இன்று –
ஊரெல்லாம்
தண்ணி என்று
அரசிடம் சொன்னது
பொதுமக்கள்…
கண்டு கொள்ளவில்லை அரசு
திண்டாடினர் மக்கள்..!

(தீபாவளியை ஒட்டிய ஒரு வார டாஸ்மாக் வருமானம் ரூ. 500 கோடிக்கும் மேல்... தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புக்கு அரசு ஒதுக்கீடு ரூ. 500 கோடி மட்டும்)




Monday, November 16, 2015

மழை தேவையில்லை..?



குளிரூட்டி இன்றி
ஊரெங்குமுள்ள
ஏழைகளின் வீடுகளில்
ஏசி காற்றை
வீசிச் செல்கிறது
இந்த பருவமழை..!
மின்சாரத் தேவையில்லை
அறைகளை மூடத் தேவையில்லை!

ஊரெங்கும் நிறுவப்பட்டிருக்கும்
உத்தமர் சிலைகளுக்கு
உள்ளூர கொண்டாட்டம்
கடும் மழையில் குளித்தும்
கரையாமல்
கம்பீரமாய் நிற்கிறோமென்று…
நீரிங்கு வீணில்லை..!
காக்கை எச்சங்கள் நிலைப்பதில்லை!

பூமிப்பெண்ணிற்கு
மனிதன் ஏற்படுத்திய
மாசுகளை
பெருமழை எனும் பெயரால்
வானமகன் வாரி வீசி
கழுவுகின்றான்…
சோப்பு இங்கு தேவையில்லை
துவட்டத் துண்டு தேவையில்லை!

தண்ணியின்றி தவிக்கும்
தாவரங்களுக்கு
தாங்காத மகிழ்ச்சி..!
நீர் குடிக்க
ஆழ வேர் பரப்பி
மண்ணோடு உறவாடுகின்றன..!
வான்மழை தன்னை
வாஞ்சையோடு தழுவுகின்றன!
செயற்கை உரம் தேவையில்லை
செயற்கை நீர் தேவையில்லை..!

ஆனால் -
ஏரி குளங்களை
ஆக்கிரமிக்கும் ஜந்துகளுக்கும்
பிளாஸ்டிக் குப்பைகளை
உருவாக்கும் மாக்களுக்கும்
பெருமழை தேவையில்லை
அடைமழை தேவையில்லை
அழிவினை செய்யும்
அரக்கர்களுக்கு எதுவுமே தேவையில்லை…

தேவையில்லை என்பதால்தான்
எல்லாவற்றையும்
அழித்தெடுத்துச் செல்கிறது
அடைமழையால் உருவான பெருவெள்ளம்!
புரட்டி எடுத்துச் செல்கிறது
பெரும் புயல் வெள்ளம்!
மூழ்க வைத்துக் கொள்கிறது
சிறு மழைத்துளிகளால்
உருவான மா வெள்ளம்…
இயற்கையை நேசி…
அதுவே நம்மை காப்பாற்றும்..!




Thursday, November 12, 2015

ஆனால் நமக்குத்தான்..?




தன்னில் மறுபாதி
இருண்டுவிடுமே
என்று நினைத்து
பூமித்தாய் என்றும்
சுழல்வதை நிறுத்துவதில்லை
விரைவில் விடிந்துவிடும்
என்ற நம்பிக்கையில்..!

தன்னுள் இருக்கும்
நீரெல்லாம் ஆவியாகுமே
என்று நினைத்து
கடலன்னை என்றும்
தன் ஆவியைக் கரைப்பதை
நிறுத்துவதில்லை
மழையாய் தன்னிடம்
வந்துவிடும் என்ற நம்பிக்கையில்!

தன் உடல், பொருள்
ஆவியெல்லாம்
குழவி எடுத்துக்கொள்ளுமே
என்று நினைத்து
நம் அன்னை நம்மை
வளர்த்தெடுப்பதை நிறுத்தவதில்லை
மானுடத்திற்கு நாம்
பயனுறுவோம் எனும் நம்பிக்கையால்…!

உலகிலுள்ள அனைத்து
அன்னைகளுக்கும்
என்றுமே நம் மீது
அசைக்க முடியா
நம்பிக்கைகளுண்டு…
ஆனால் நமக்குத்தான்..?




Tuesday, July 28, 2015

எங்கள் அப்துல் கலாம் ஐயாவே..!





இந்திய தென்கோடி
மண்ணில் பிறந்து
விண்ணை ஆண்ட
எங்கள் அப்துல் கலாம் ஐயாவே
எங்களின் 120 கோடி இதயங்களை
துடிக்க விட்டு
உங்களின் இதயத் துடிப்பை
நிறுத்தியது ஏன்?

‘வல்லூறு நாடுகளுக்கிடையே
இந்தியாவை வல்லரசாக்க
வாருங்கள் மாணவர்களே..!’
என்றழைத்த எங்கள் ஆசானே
மண்ணிலுள்ள உங்கள்
மாணவர்களை துடிக்க விட்டு
விண்ணில் நட்சத்திரமாய்
மறைந்து போனது ஏன்?

அணுகுண்டு சோதனையில்
அணுவைப் போல்
அடக்கமாய் செயல்பட்டு
வினையில் விண்ணைத்தொட்ட
அறிவியல் ஐயனே…
உலக அரங்கில் தலை நிமிர்ந்த தமிழனே
உங்களின் சிம்மக் குரல்
மரணச் சிறைக்குள் அகப்பட்டது ஏன்?


ஏவுகணையின் நாயகனே
ஏழைகளின் தூயவனே
எளிமையின் இருப்பிடமே
தமிழகம் ஈன்றெடுத்த தங்கமே
உன் பிரிவாலின்று
குமரி முதல் இமயம் வரை உள்ள
240 கோடி கண்களும் அழுகிறதே
கண்ணீரைத் துடைக்க வராதது ஏன்?

‘கனவு காணுங்கள்
இந்தியைவை வல்லரசாக்க’
‘கேள்வி கேளுங்கள்
எதையும் பரிட்சித்துப் பார்க்க’
என்று எங்களுக்கு போதித்த புத்தனே
ஏன் எங்களை விட்டுச் சென்றாய்
என்று கேள்வி கேட்டு
கேவிக் கேவி அழுகிறோம்
அண்ணலே மீண்டு(ம்) வா..!

வாழ்ந்தது போதுமென்று
‘அக்னி சிறகுகள்’
கொண்டு பறந்து விட்டாயா
‘இந்தியா 2020’ முழக்கத்தை
மறந்து விடுவோம் என்று
நினைந்து விட்டாயா?
என்றென்றும் உம்

வழி நடப்போம் நாங்கள்
என்றும் அப்துல் கலாமின்
மாணவர்கள் நாங்கள்..!


(கண்ணீரோடு அழைக்கிறோம்.. மீண்டு வாருங்கள் ஐயா… எங்களின் கண்ணீரைத் துடைக்க வாருங்கள் ஐயா…)

அப்துல் கலாம் ஐயாவிற்காக 2007-இல் நான் எழுதிய சிறுவர்களுக்கான பாடல் இங்கே... நாமும் கலாம் ஆகலாம்