அதிகாலை வேளையில்
சிட்டுக்குருவியின் சிருங்காரக் குரல்கள்
எழுப்பிய காலம் போய்
இன்று செல்போன் குரல்கள்
நமை எழுப்புகின்றன..!
நகரம் நரகமாகிப் போய்விட்டதே
என்று கிராமத்தை
நோக்கிப் பறந்தால் - அங்கும்
அலைபேசி கோபுரங்கள்
அகோரப்பசியுடன்
கூறு போடக் காத்திருக்கின்றன
வானம்பாடியாய்த் திரிந்து
கானம் பாடிய
குருவிகளைக் காணோம்..?
தன் குலம் வாழ
குருவிகளைக் கொன்று
லேகியம் தின்றதொரு கூட்டம்
செயற்கை உரங்களையிட்டு
குருவிகளின் உணவுச்சங்கிலியை
அறுத்ததொரு கூட்டம்
உலகெங்கும் அளவளாவதற்கு
அலைக் கதிர்களைக் கொண்டு
குருவிகளை மலடாக்கியதொரு கூட்டம்
ஓங்கியுயர் மரங்களை அழித்து
குருவிகளின் வீடுகளை
உருத்தெரியாமல் அழித்ததொரு கூட்டம்
எதிர்காலச் சந்ததிக்கு
இனியில்லை இப்படியொரு
குருவிக் கூட்டம்!
(இன்று உலக சிட்டுக் குருவி தினம்... என் கவிதை கேட்டுக்கொண்டதற்காகவும் சிட்டுக்குருவியின் தீவிர ரசிகன் என்பதாலும் இக்கவிதையை எழுதியிருக்கிறேன்)
