ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, March 22, 2018

வான் மழை தந்த தண்ணீரே! - சிறுவர் பாடல்!



வான் மழை தந்த தண்ணீரே!
வராமல் போனால் கண்ணீரே!
ஊனைக் காப்பது தண்ணீரே
உடலில் ஓடுது செந்நீரே!

உயிரைத் தருவது தண்ணீரே!
உடலில் எழுபது சதம் நீரே!
பயிரைக் காப்பது தண்ணீரே!
பசியைப் போக்குது உன் நீரே!

குடிக்கத் தேவை தண்ணீரே!
குறுநாவில் ஊறுது உமிழ்நீரே!
குளிக்கத் தேவை தண்ணீரே!
கிராமத்திலிருக்கு குளம் நீரே!

சுனையில் பிறக்கும் தண்ணீரே
அருவியாய் விழுவது உன் நீரே!
ஆறாய் ஓடும் தண்ணீரே!
கடலில் கலப்பது உன் நீரே!

குடிநீரை தினமும் சேமிப்பீரே
உயிர் நீர் என்று உணர்வீரே!
நீரின்றி அமையா உலகென்ற
வள்ளுவன் சொல்லைக் காப்பீரே!





Wednesday, March 21, 2018

எங்கும் இல்லை! - உலக கவிதை தின சிறப்புக் கவிதை!


உலகில் அன்னையைப் போலொரு
அணைக்கும் கவிதை எங்கும் இல்லை!
கலியில் தந்தையைப் போலொரு
வணங்கும் கவிதை எங்கும் இல்லை!

அழுகையில் அக்காவினைப் போலொரு
துடைக்கும் கவிதை எங்கும் இல்லை!
விழுகையில் அண்ணனைப் போலொரு
தாங்கும் கவிதை எங்கும் இல்லை!

அறிவினில் ஆசிரியனைப் போலொரு
வாள்தரும் கவிதை எங்கும் இல்லை!
உறவினில் நண்பனைப் போலொரு
தோள்தரும் கவிதை எங்கும் இல்லை!

அழகில் காதலியைப் போலொரு
மயக்கும் கவிதை எங்கும் இல்லை!
பொழுதில் மனைவியைப் போலொரு
முயக்கும் கவிதை எங்கும் இல்லை!

கொஞ்சும் மழலையைப் போலொரு
சுவைதரு கவிதை எங்கும் இல்லை!
கொஞ்சும் தமிழினைப் போலொரு
மொழிதரு கவிதை எங்கும் இல்லை!

விஞ்சும் உறவுகளைப் போலொரு
வில்லங்கக் கவிதை எங்கும் இல்லை!
அஞ்சும் மரணத்தைப் போலொரு
ஆழ்துயில் கவிதை எங்கும் இல்லை!

(உலக கவிதைகள் தினத்திற்காக இன்று காலை அவசர அவரசமாகக் கிறுக்கியது)




Thursday, August 10, 2017

சங்கிலிப் பறிப்பு

’ஹெல்மெட் அணிந்த
கொள்ளையர்கள்
சாலையில் சென்ற
பெண்களிடம்
சங்கிலிப் பறிப்பு’ செய்தியை
பெட்டிக்கடையில்

பல்லிளித்துக் கொண்டிருந்த
வால் போஸ்டரில்
பார்த்துவிட்டு
பைக்கில்
வந்துகொண்டிருக்கையில்
போக்குவரத்துக்
காவல் துறை
வழிமறித்துக் கேட்டது!
“நீங்கள் ஏன்
ஹெல்மெட் போடவில்லை?”




Wednesday, December 7, 2016

தலைநிமிர்ந்த எனது பேனா!

 
உங்கள் ஆட்சியில்
ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள்
நாட்டை சுரண்டிய அமைச்சுகள்
டாஸ்மாக் விற்பனைகள்
என பல்வேறு
விஷயங்களுக்காக
உங்களுக்கு எதிராய்
தலைநிமிர்ந்து
எழுதிய எனது பேனா
நீங்கள் இம்மண்ணிலிருந்து
மறைந்து போன போது
தலைகுனிந்து
கண்ணீர் விட்டதை
பகிரங்கமாய் ஒப்புக்கொள்கிறேன்!
நீங்கள் கட்டிக்காத்த தமிழகம்
இனி என்னாகுமோ
என்ற கவலையில்
என் பேனா
விழிப்போடு இருக்கிறது!
வல்லூறுகளும்
பிணம் தின்னி கழுகுகளும்
என் தமிழ்நாட்டை
கூறுபோட்டிடுமோ
என்ற கவலையில்
என் பேனாவை
முன்னை விட முனைப்போடு
கூர்தீட்டிக் கொள்கிறேன்!
சத்தியத்தின் பக்கத்தில்
சத்தியமாய்
நீங்கள் இருப்பீர்
என்ற நம்பிக்கையில்..!




Tuesday, December 6, 2016

இரும்புத் தாரகையே! - ஜெயலலிதாவிற்கு கவிதாஞ்சலி




சிந்தனை, செயல், வேகம் என அனைத்திலும்
பெண் சிங்கமென செயல்பட்ட மனமே எழுவாயோ?

வந்தனை பாடும் கூட்டத்தை எல்லாம் பந்தாடி
நிந்தனை கூட்டத்தை துரத்தியடித்த மனமே எழுவாயோ?

உன் குரல் கேட்டு ஒடுங்கிய சிறு நரிகளெல்லாம்
இன்று கூடி நின்று வேடிக்கை பார்க்கிறதே எழுவாயோ?

காவிரி, பெண் குழந்தை பாதுகாப்பு, இட ஒதுக்கீடு
என நீ செய்த நன்மைகள் ஒன்றல்ல இரண்டல்ல எனினும்

தமிழகம் நீ இருந்த போதே தள்ளாடிற்று – நீயின்றி
எப்படித் தள்ளாடுமோ என கவலையுறுறேன் குடிமகனாய்!

உன் மேல் எனக்கு ஆயிரம் வருத்தமிருப்பினும் - பெண்
இனத்தின் வழிகாட்டி என்பதில் பெருமை கொள்கிறேன்!

நிலவு முகம் கொண்ட உனைச் சுற்றி இருள் சூழுதே!
உலரும் வங்கக்கரை மண்ணுளுன் பொன்னுடல் மறையுதே!

துரோகங்களைத் தாங்கி துயரங்களைத் தாங்கி
தமிழகத்தினை வழிநடத்திய இரும்புத் தாரகையே

உண்மையில் நீ வானத்துத் தாரகையாகி விட்டாய் - உன்
துதி பாடி, கறை படிந்த கரங்கள் இனி இருளட்டும்

நீ கொண்டு வந்த நல்ல திட்டங்கள் உன் பேர் சொல்லட்டும்!
உன்னால் புனர்வாழ்வு பெற்ற ஏழைகள் உன் புகழ் பாடட்டும்!

தமிழகத்தின் தனிப்பெரும் இரும்பு பெண்மணியே
தாயே நின் ஆன்மா இயற்கையோடு இணையட்டும்!




Monday, August 8, 2016

குப்பை வண்டி!

ஊரைச் சுத்தப்படுத்துகிறேன்
எனும் போர்வையில்
தெருக்களை சுத்தப்படுத்தும்
மாநகராட்சி குப்பை வண்டி
குப்பைத்தொட்டியில் இருந்து
குப்பைககளை மொத்தமாய்
அள்ளிக் கொண்டு
தெரு முழுக்க இறைத்துக் கொண்டு
போவது போல
இன்றைய அரசியல் கட்சிகள்
தமிழ்நாட்டை
குப்பையாக்கிக் கொண்டிருக்கின்றன!

(இன்று காலை அலுவலகம் வரும் சாலையில் சென்னை மாநாகராட்சியின் குப்பை வண்டி செய்த வேலையை சாலையில் பார்த்த போது... தோன்றியது... )




Saturday, August 6, 2016

பச்சை உயிரி!


உலக உயிர்கள்
எல்லாம்
சுவாசிக்க வேண்டும்
என்பதற்காக
தன் உடலெங்கும்
சுவாசப் பையினை
சுமந்து கொண்டிருக்கும்
பச்சை உயிரி
'மரம்..!'

(இன்றும், வழக்கம் போல சிலம்பாட்டப் பயிற்சியில் இருக்கும் போது, பிரசாந்த் எனும் 16 வயது பையன் என்னிடம்  கவிதை சொல்லக் கேட்ட தலைப்பு 'மரம்'

இரண்டு நிமிட யோசிப்பில், சிலம்பத்தை சுழற்றியபடியே அவனிடம் சொன்ன கவிதை இது...)




Friday, August 5, 2016

ரசாயனக் காதலால்..!


இரும்பிற்கும்
ஈரப்பதக் காற்றிற்கும்
ஏற்பட்ட
ரசாயனக் காதலால்
பிறந்த குழந்தை
'துரு'

**************************

(இன்று காலை சிலம்பப் பயிற்சியின் போது, என்னுடன் பயிற்சி செய்யும் 16 வயது பையன் ஒருவன்... அண்ணா நீங்க கவிதை எல்லாம் சொல்லுவீங்களாமே... எனக்கு ஒரு கவிதை சொல்லுங்கண்ணா என்று கேட்க... எதைப்பத்தி கவிதை சொல்லணும் என்று கேட்டேன். பக்கத்தில் இருந்த இரும்புப் பெட்டியில் துரு பிடித்திருந்ததைப் பார்த்ததும்... 'துரு' பத்தி கவிதை சொல்லுங்கண்ணா என்றான்.

அடுத்த ஒரு நிமிடத்தில் கவிதை சொன்னேன்... அண்ணா.. சூப்பருங்கண்ணா... என் ஸ்கூல்ல கவிதைப் போட்டின்னா உங்ககிட்டதான் வருவேன்.. எழுதிக் கொடுங்கண்ணா என்றான். 


அவனிடம் சொன்னது அப்படியே மேலே....)




Tuesday, July 12, 2016

ஒப்பற்ற ஒளிவிளக்கு! - காமராஜருக்கு பிறந்தநாள் வாழ்த்து!



கல்வி ஒளியற்று
இருண்டு கிடந்த
தமிழகத்தை
கல்வி ஒளியால்
வெளிச்சமேற்றிய
ஒப்பற்ற ஒளிவிளக்கு
காமாட்சி எனும் விளக்கு
காமராசர் எனும்
தமிழ் விளக்கு!

**************************

பனையோலையில்
'தொட்டணைத்தூறும்
மணற்கேணி'
என்றார் திருவள்ளுவர்
ஏழைகளின்
மன ஒலையில்
கற்றணைத்தூறும்
கல்வி அறிவு
என்று எழுதாமல்
அரசுப்பள்ளிகளின் மூலம்
எழுத வைத்து
கல்விச் செம்மல்
எங்கள் காமராசர்
ஏழைகளுக்கு
கல்விக்கண் திறந்த
காமராசர்!

**************************

எனைப்போன்ற
கல்வி வாசம் அறியா
குழந்தைகளுக்கு
கடையேழு வள்ளல்களை
அறிமுகப்படுத்தியது
யாரென்று கேட்டால்
இலக்கியமில்லை
புத்தகமில்லை
ஆசிரியரில்லை
கல்வி தந்த வள்ளல்
காமராசர் என்பேன்!

**************************

(எங்களின் கல்வி வள்ளல் காமராசரின் பிறந்தநாள் வரும் ஜூலை 15 அன்று வருகிறது. அதற்காக இந்த குட்டிக்கவிதைகள் சமர்ப்பணம்... கடலை கடுகில் அடக்கமுடியாது... அவரின் புகழை எதனாலும் அடக்க முடியாது...)




Friday, April 29, 2016

ஆறாய்ப் பெருகி..!


கனவுகள் வழியே
என் நினைவுகளைத் 
திருடிச் செல்லும்
தேவதையே..!

குரலின் வழியே
என்னுயிரினை
உரசிச் செல்லும்
பூங்குயிலே..!

ஓரப்பார்வையின் வழியே
என்னுலகினை
வசியம் செய்யும்
வான்மதியே..!

உன் அன்பின் வழியே
உன்னால் இங்கு
பனியாய் உருகி வழிகின்றேன்..!

ஆறாய் பெருகி ஓடுகின்றேன்..!

நீ அணையாக இருந்தென்னை
அணைப்பாயா?
நீ துணையாக இருந்தென்னை 
இணைப்பாயா?

(தமிழரின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான... சிலம்பாட்டத்தை கற்றுக்கொண்டு வருகிறேன். நான் ஆடிய சிலம்பாட்டத்தை பார்க்கறீங்களா...: மோகனனின் சிலம்பாட்டம்)




Tuesday, March 22, 2016

நீரில் மிதக்கும் பூமிப்பந்து - உலக தண்ணீர் தின சிறப்புக் கவிதை!



ஓர் வகையில்
பார்த்தால்

இவ்வுலகும்
மனிதனும்  ஒன்றே!
அறிந்து சொல்வேன் இன்றே!
அது எதுவென்று
ஆராய்ந்து பார்ப்பின்
நீர் வகையில்
இரண்டும் ஒன்றே!
அறிந்திடுவீர் நீர் இதை நன்றே!

உலகில்
எழுபது சதவீதமும்
உடலில்
எழுபது சதவீதமும்
நிறைந்திருப்பது
உயிர் நீரே!
நம் உடலில் நீரும்
வற்றிவிட்டால்
உயிரும் காற்றாய் பறந்திடுமே
கடலில் நீரும் வற்றிவிட்டால்
உலக உயிரினங்ள்
சாம்பலாகிப் பறந்திடுமே!

யானை, புலி, சிங்கமெல்லாம்
தாகம் தணிக்க மட்டுமே
நீர் பருகும்
மனிதனெனும் மிருகம் மட்டுமே
தன் தேவைகள்
அனைத்திற்கும் நீர் உறிஞ்சும்!

தாவரம் வாழ
நீர் வேண்டும்
விலங்குகள் வாழ
நீர் வேண்டும்
உயிரினம் வாழ
நீர் வேண்டும்!

உணவைப் படைக்க
நீர் வேண்டும்
உயிரைப் படைக்க
நீர் வேண்டும்
உயிரைச் சுமக்க
நீர் வேண்டும்!


உணவுச் சங்கிலி உயிர்ப்போடிருக்க

உலகில் மறையா நீர் வேண்டும்
நீ, நானின்றி உலகிருக்கும்
நீரின்றி உலகிருக்காது
நம்மைக் காக்க
நீர் இருக்க…
நீரைக் காக்க யார் வருவார்?
நம்மை நாமே
காப்பதுபோல்
நீரை நாமும் காத்திடுவோம்!


நீரில் மிதக்கும் பூமிப்பந்தினை
வெப்பக்காடாய் மாற்றாமல்
பசுமைக்காடாய் மாற்றிடுவோம்!
மரங்களை புவியில் வளர்த்து
மண்ணில் நீரை சேமித்திடுவோம்
நீரை மாசு செய்யாமல்
நிதமும் சேகரம் செய்திடுவோம்!
அடுத்து வரும் தலைமுறைகளுக்கு
கானல் நீரைத் தாராமல்
நன்னீரையே பரிசளிப்போம்!


(இன்று உலக தண்ணீர் தினம்)

(நான் கௌரவ விருந்தினராக கலந்த கொண்ட நிகழ்ச்சி குறித்த தொகுப்பு இங்கே..: 'ஆசிரியர் வைபவம்' நிகழ்ச்சியில் அசத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!)




Friday, January 29, 2016

முடியாது..!



"என்னால் முடியாது...
எதுவுமே முடியாது...
தொலைதூரத்தில்
இருக்கும் உன்னிடம்
அலைபேசியில்
ஆர்ப்பரிக்கும் அலையைப்போல்
பேசமுடிகின்ற என்னால்…
நேரில் சந்தித்தால்
ஒரு நொடிகூட
தைரியமாய் பேச முடியாது..!"
என அடிக்கடி சொல்லிக் ‘கொல்கிறாய்’
'வாய் பேச முடியாவிட்டாலென்ன?
உன்னிரு கண்கள் போதுமே
பேசுவதற்கு…' - என்றேன்
"அதுவும் முடியாது…
வெட்கத்தால்
கண்களை தாழ்த்திக் கொள்வேன்…
மொத்தத்தில்
உன்னை நேரில் பார்த்தால்
என்னால் எதுவுமே முடியாது…"
என்று சொன்னவளே…
குங்குமப்பூவைப் போல்
வெட்கப்பட மட்டும் உன்னால்
எப்படி முடிந்ததாம்..!


('முடியாது' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுத முடியுமா என்று என்னிடம் சவால் விட்டதற்காக எழுதப்பட்ட காதல் கவிதை இது... அட நீங்களும் கூட சவலான தலைப்பைத் தரலாம். கருப்பொருளும் உங்கள் விருப்பம் போல... 

மயிலிறகோடு நான் தயார்... நீங்கள்..? )




Thursday, January 28, 2016

உம்ம்ம்…!



என் தமிழ் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் பேச்சு பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் மொழி நடை பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் குறும்புகள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் சீண்டல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் கிறுக்கல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என் கொஞ்சல்கள் பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
என்னை பிடிச்சிருக்கா?
“உம்ம்ம்…”
இப்படி எல்லாவற்றிற்கும்
“உம்ம்ம்” சொன்ன கள்ளியே
என் காதலுக்கு மட்டும்
கள்ளத்தனமாய்
“ஊஹும்…” சொல்வதேன்..!




Wednesday, January 27, 2016

எதுவுமே வேண்டாம்..!



என்னிடமிருந்து
அன்பு வேண்டாம்...
அரவணைப்பு வேண்டாம்...
துன்பம் வேண்டாம்...
துயரம் வேண்டாம்...
அழுகை வேண்டாம்...
பொய்மை வேண்டாம்...
பேதம் வேண்டாம்...
ஆதிக்கம் வேண்டாம்...
இவை எதுவுமே
எனக்கு வேண்டாமென்று
சொல்கிறாயே...
அன்பொன்றிருந்தால்
அரவணைப்பு வந்துவிடும்!
இவையிரண்டும்
வந்துவிட்டால்
மற்றவை எல்லாம்
உன்னிடம் வாராமல் போய்விடுமே...
அப்புறம் எப்படி
அதனை வேண்டாமென்று
சொல்வாய்..?




Thursday, January 14, 2016

தைப் பொங்கல்..!




வான்மழை பொய்க்காமல்
நீர்நிலை வற்றாமல்
வயல் வெளி சிறுக்காமல்
பயிர் வகைகள் கருக்காமல்
உழவன் நிலை தாழாமல்
தமிழன் மானம் வீழாமல்
இந்த ஆண்டிலேனும்
காக்கட்டும் இந்த தைப் பொங்கல்..!

பூங்கரும்பு பந்தலிட
தேன்கரும்பு பொங்கலிட
வானுயர்ந்த சூரியனும்
நிலமுயர்த்தும் விலங்குகளும்
ஏர் பிடிக்கும் தமிழினமும்
செழித்துத் தழைத்திட
செம்மையாய் வரட்டும்
இந்த தைப்பொங்கல்..!

(என் அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்)