உன் மூடிய இமைக்குள்
கருவிழியாய் நான்..!
கார்மேகக் கூந்தலில்
மணக்கும் மல்லிகையாய் நான்..!
தந்தங்கள் இழைத்த உன் கன்னத்தில்
விழும் குழியாய் நான்..!
உன் சந்திர வடிவ நெற்றியில்
சூரியக் குங்குமமாய் நான்..!
உன் வெண்சங்குக் கழுத்தில்
பொன் மஞ்சள் நாணலாய் நான்..!
மூடி மறைத்த உன்
மார்புகளுக்கிடையில்
இறங்கும் வியர்வைத் துளிகளாய் நான்..!
உன் பூந்தளிர்க் கரங்களில்
ஒலிக்கும் வளையல்களாய் நான்..!
கொழுத்த உன் வயிற்றினில்
கொப்பூழாய் நான்..!
உன் வாழைத் தண்டு கால்களில்
ஒலிக்கும் கொலுசொலிகளாய் நான்..!
மெல்லிய உன் கால் விரல்களில்
ஒளிரும் மெட்டியாய் நான்..!
இப்படி உன்னுள் அனைத்தும்
நானாக விரும்புகிறேன்..!
உன்னுள்ளும் உணர்ச்சிகள்
உண்டென்பதை நானறிவேன்..!
வாழ்க்கைக்காக நீ காத்திருந்தது
போதும் கண்ணே..!
உனக்காக ஒரு வாழ்க்கையே
இங்கு காத்திருக்கிறது..!
நீ விதவையெனில் உனை
நான் காதலிக்கலாகாதோ..!
சகியே… சமூகம் ஒரு குப்பையடி
அது சாத்திரங்களின் நாற்றமடி..!
போதும் உனது பொய் வாழ்க்கையடி..!
உன் விதவைக் கோலத்தைத் துறந்திடடி..!
உன் பழைய வாழ்வை மறந்திடடி..!
என் உணர்வுகளை நீயும் மதித்திடடி..!
என்னுள் இரண்டறக் கலந்திடடி..!