ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, June 4, 2018

ஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!


அன்று நீ இப்பூமிக்கு வந்த தினத்தை நினைத்துப் பார்க்கிறேனடா அகிலா இன்றும் ஆறாத வடுவாய் ஆகிப்போனது நீயிங்கு அவதரித்த அன்றைய தினம் (1) செஞ்சுடராய் நீ பிறந்திருக்கிறாய் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்த போது மஞ்சள் காமாலை இவனுக்கு - இன்னும் இருபத்திநான்கு மணி நேரம் போகட்டும் (2) உயிர் பிழைப்பானா மாட்டானா என்று உனைப் பரிசோத்தித்த மருத்துவனின் விடை உயிரே போனது போலாயிற்று எனக்கு உன் தந்தையின் கண்களில் கண்ணீர் கடை! (3) உடல் கிழித்து உனை ஈன்ற அன்னைக்கு என்ன பதில்கூறுவேன் என்ன செய்வேன்? உடன்பிறப்பு தம்பியென மகிழ்ந்த உன் அண்ணனுக்கு என்ன பதில் கூறுவேன்? (4) கண்களில் கண்ணீர் அருவியாய் பெருக்கெடுக்க தொண்டைக் குழிக்குள் பெருந்துன்பம் அடைக்க மண்ணுக்கு நீ வாராமலிருந்திருக்கலாம் மகனே என நினைக்க வைத்த நாட்கள் அவை அகிலா! (5) ராச மருத்துவரின் கண் பட்டு கை பட்டு மஞ்சள் பூத்ததெல்லாம் மறைந்து போக பூசை செய்யும் ஐம்பொன் மேனியனாய் அகிலத்தில் வளர்ந்தாய் எங்கள் மகனே! (6) அன்று நீ தாங்கிய மருத்துவ சிகிச்சைகள்தான் உனை இன்று உரமேற்றி இருக்கின்றனவோ என்று நானும் உன் அன்னையும் அடிக்கடி பேசிக் கொள்வோம்..! சிலாகித்துக் கொள்வோம்! (7) குறும்புகளின் மொத்த உருவமாய் இருப்பதும் இரும்பென எதையும் தாங்கும் உறுதியிருப்பதும் அரும்பென மலரும் அழகு புன்னகை இருப்பதும் உனக்கே உனக்கென வாய்த்த சொத்துகளடா! (8) எங்களின் பதிற்றுப்பத்தே, எம்வம்சத்தின் முத்தே அகிலம் ஆண்ட பராந்தக சோழனின் பெயரினில் பங்கு பிரித்து அகிலனென பெயர் சூட்டினோமன்று அகிலமாளும் காலத்தில் வாழ்த்துவோம் நின்று! (9) அன்பு, பண்பு, அறிவு, ஆற்றல், செல்வம், நீளாயுள் ஆளுமை, திறமை, பொறுமை, வாய்மை பெற்று இன்பத்தோடு என்றும் வாழ்க எம்மிளைய மகனே உனக்கென் பத்தாமாண்டு பிறந்தநாள் வாழ்த்து! (10)




No comments: