அன்று நீ இப்பூமிக்கு வந்த தினத்தை
நினைத்துப் பார்க்கிறேனடா அகிலா
இன்றும் ஆறாத வடுவாய் ஆகிப்போனது
நீயிங்கு அவதரித்த அன்றைய தினம் (1)
செஞ்சுடராய் நீ பிறந்திருக்கிறாய் என்று
நான் நினைத்துக்கொண்டு இருந்த போது
மஞ்சள் காமாலை இவனுக்கு - இன்னும்
இருபத்திநான்கு மணி நேரம் போகட்டும் (2)
உயிர் பிழைப்பானா மாட்டானா என்று
உனைப் பரிசோத்தித்த மருத்துவனின் விடை
உயிரே போனது போலாயிற்று எனக்கு
உன் தந்தையின் கண்களில் கண்ணீர் கடை! (3)
உடல் கிழித்து உனை ஈன்ற அன்னைக்கு
என்ன பதில்கூறுவேன் என்ன செய்வேன்?
உடன்பிறப்பு தம்பியென மகிழ்ந்த உன்
அண்ணனுக்கு என்ன பதில் கூறுவேன்? (4)
கண்களில் கண்ணீர் அருவியாய் பெருக்கெடுக்க
தொண்டைக் குழிக்குள் பெருந்துன்பம் அடைக்க
மண்ணுக்கு நீ வாராமலிருந்திருக்கலாம் மகனே
என நினைக்க வைத்த நாட்கள் அவை அகிலா! (5)
ராச மருத்துவரின் கண் பட்டு கை பட்டு
மஞ்சள் பூத்ததெல்லாம் மறைந்து போக
பூசை செய்யும் ஐம்பொன் மேனியனாய்
அகிலத்தில் வளர்ந்தாய் எங்கள் மகனே! (6)
அன்று நீ தாங்கிய மருத்துவ சிகிச்சைகள்தான்
உனை இன்று உரமேற்றி இருக்கின்றனவோ
என்று நானும் உன் அன்னையும் அடிக்கடி பேசிக்
கொள்வோம்..! சிலாகித்துக் கொள்வோம்! (7)
குறும்புகளின் மொத்த உருவமாய் இருப்பதும்
இரும்பென எதையும் தாங்கும் உறுதியிருப்பதும்
அரும்பென மலரும் அழகு புன்னகை இருப்பதும்
உனக்கே உனக்கென வாய்த்த சொத்துகளடா! (8)
எங்களின் பதிற்றுப்பத்தே, எம்வம்சத்தின் முத்தே
அகிலம் ஆண்ட பராந்தக சோழனின் பெயரினில்
பங்கு பிரித்து அகிலனென பெயர் சூட்டினோமன்று
அகிலமாளும் காலத்தில் வாழ்த்துவோம் நின்று! (9)
அன்பு, பண்பு, அறிவு, ஆற்றல், செல்வம், நீளாயுள்
ஆளுமை, திறமை, பொறுமை, வாய்மை பெற்று
இன்பத்தோடு என்றும் வாழ்க எம்மிளைய மகனே
உனக்கென் பத்தாமாண்டு பிறந்தநாள் வாழ்த்து! (10)
ட்விட்டரில் தொடர
Monday, June 4, 2018
Thursday, March 22, 2018
வான் மழை தந்த தண்ணீரே! - சிறுவர் பாடல்!
வான் மழை தந்த தண்ணீரே!
வராமல் போனால் கண்ணீரே!
ஊனைக் காப்பது தண்ணீரே
உடலில் ஓடுது செந்நீரே!
உயிரைத் தருவது தண்ணீரே!
உடலில் எழுபது சதம் நீரே!
பயிரைக் காப்பது தண்ணீரே!
பசியைப் போக்குது உன் நீரே!
குடிக்கத் தேவை தண்ணீரே!
குறுநாவில் ஊறுது உமிழ்நீரே!
குளிக்கத் தேவை தண்ணீரே!
கிராமத்திலிருக்கு குளம் நீரே!
சுனையில் பிறக்கும் தண்ணீரே
அருவியாய் விழுவது உன் நீரே!
ஆறாய் ஓடும் தண்ணீரே!
கடலில் கலப்பது உன் நீரே!
குடிநீரை தினமும் சேமிப்பீரே
உயிர் நீர் என்று உணர்வீரே!
நீரின்றி அமையா உலகென்ற
வள்ளுவன் சொல்லைக் காப்பீரே!
வகைப்பாடு
world water day,
உலக தண்ணீர் தினம்,
கவிதை,
சிறுவர் பாடல்
Wednesday, March 21, 2018
எங்கும் இல்லை! - உலக கவிதை தின சிறப்புக் கவிதை!
உலகில் அன்னையைப் போலொரு
அணைக்கும் கவிதை எங்கும் இல்லை!
கலியில் தந்தையைப் போலொரு
வணங்கும் கவிதை எங்கும் இல்லை!
அழுகையில் அக்காவினைப் போலொரு
துடைக்கும் கவிதை எங்கும் இல்லை!
விழுகையில் அண்ணனைப் போலொரு
தாங்கும் கவிதை எங்கும் இல்லை!
அறிவினில் ஆசிரியனைப் போலொரு
வாள்தரும் கவிதை எங்கும் இல்லை!
உறவினில் நண்பனைப் போலொரு
தோள்தரும் கவிதை எங்கும் இல்லை!
அழகில் காதலியைப் போலொரு
மயக்கும் கவிதை எங்கும் இல்லை!
பொழுதில் மனைவியைப் போலொரு
முயக்கும் கவிதை எங்கும் இல்லை!
கொஞ்சும் மழலையைப் போலொரு
சுவைதரு கவிதை எங்கும் இல்லை!
கொஞ்சும் தமிழினைப் போலொரு
மொழிதரு கவிதை எங்கும் இல்லை!
விஞ்சும் உறவுகளைப் போலொரு
வில்லங்கக் கவிதை எங்கும் இல்லை!
அஞ்சும் மரணத்தைப் போலொரு
ஆழ்துயில் கவிதை எங்கும் இல்லை!
(உலக கவிதைகள் தினத்திற்காக இன்று காலை அவசர அவரசமாகக் கிறுக்கியது)
வகைப்பாடு
Social poems,
அம்மா,
உலக கவிதை தினம்,
கவிதை,
சமூகம்
Wednesday, December 27, 2017
அறம் செய்ய விரும்புவோம் புத்தகம் இப்போது விற்பனையில்...
அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு...
நான் அண்மையில் ‘அறம் செய்ய விரும்புவோம்’ - நாடக வடிவில் ஆத்திசூடி கதைகள் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறேன்.
இப்புத்தகத்தை பாரதி புத்தகாலயத்தின் புக் ஃபார் சில்ட்ரன் வெளியிட்டிருக்கிறது.
சிறார்கள், பள்ளி மாணவர்களுக்கு ஆத்திசூடியை, தற்கால உதாரணங்களோடு, நாடகமாக எழுதி இருக்கிறேன். அதாவது, அறம் செய விரும்பு முதல் அஃகஞ் சுருக்கேல் வரை 13 செய்யுள்களுக்கு 13 காட்சிகளை நாடகமாக எழுதி இருக்கிறேன்.
வகுப்பறைகளில், வீடுகளில், பொது விழாக்களில் என நாடகமாக இதை நடித்துக்காட்டலாம். இதன் மூலம் குழந்தைகளின் தனித்தன்மை, நடிப்புத் திறமையும் வெளிப்படும். அமேசானின் கிண்டிலிலும் படிக்கக் கிடைக்கிறது.
மொத்தம் 64 பக்கங்கள். விலை ரூ. 50.
ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்: https://thamizhbooks.com/aram-seiyya-virumbuvom.html
சென்னையில் உள்ள பாரதி புத்தகாலயத்திலும் வாங்கிக்கொள்ளலாம்.
அடுத்ததாக, சிறுவர்களுக்கான பாடல்களை எழுதி இருக்கிறேன். இது ‘ஓடி வா.. ஓடி வா... சின்னக்குட்டி’ என்ற தலைப்பில் வெளிவர இருக்கிறது.
Thursday, September 21, 2017
அறம் செய்ய விரும்புவோம்! - நாடக வடிவில் ஆத்திசூடி கதைகள்!
வணக்கம் வலைப்பூ நண்பர்களே...
ஆத்திசூடியை நாடக வடிவில் கதையாக எழுதி இருக்கிறேன். இதை புத்தகமாக வெளியிடுகிறது பாரதி புத்தகாலயம். விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது இப்புத்தகம்... உங்களின் அன்பும் ஆதரவும் இப்புத்தகத்திற்கு கிடைக்கும் என நம்புகிறேன்.
பள்ளி செல்லும் சிறுவர்களுக்காகவும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் குடும்பங்களின் குழந்தைகளுக்காகவும் இந்த நாடக நூல் பயன்படும்....
ஆத்திசூடியை நாடக வடிவில் கதையாக எழுதி இருக்கிறேன். இதை புத்தகமாக வெளியிடுகிறது பாரதி புத்தகாலயம். விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது இப்புத்தகம்... உங்களின் அன்பும் ஆதரவும் இப்புத்தகத்திற்கு கிடைக்கும் என நம்புகிறேன்.
பள்ளி செல்லும் சிறுவர்களுக்காகவும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் குடும்பங்களின் குழந்தைகளுக்காகவும் இந்த நாடக நூல் பயன்படும்....
Thursday, August 10, 2017
சங்கிலிப் பறிப்பு
’ஹெல்மெட் அணிந்த
கொள்ளையர்கள்
சாலையில் சென்ற
பெண்களிடம்
சங்கிலிப் பறிப்பு’ செய்தியை
பெட்டிக்கடையில்
பல்லிளித்துக் கொண்டிருந்த
வால் போஸ்டரில்
பார்த்துவிட்டு
பைக்கில்
வந்துகொண்டிருக்கையில்
போக்குவரத்துக்
காவல் துறை
வழிமறித்துக் கேட்டது!
“நீங்கள் ஏன்
ஹெல்மெட் போடவில்லை?”
கொள்ளையர்கள்
சாலையில் சென்ற
பெண்களிடம்
சங்கிலிப் பறிப்பு’ செய்தியை
பெட்டிக்கடையில்
பல்லிளித்துக் கொண்டிருந்த
வால் போஸ்டரில்
பார்த்துவிட்டு
பைக்கில்
வந்துகொண்டிருக்கையில்
போக்குவரத்துக்
காவல் துறை
வழிமறித்துக் கேட்டது!
“நீங்கள் ஏன்
ஹெல்மெட் போடவில்லை?”
வகைப்பாடு
Social poems,
அனுபவம்,
கவிதை,
சமூகம்
Subscribe to:
Posts (Atom)






